பிரதமர் அலுவலகம்

மணிப்பூரின் இம்பாலில், மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 APR 2023 10:44AM by PIB Chennai

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாவான அனுராக் தாக்கூர் அவர்களே, அனைத்து மாநிலங்களின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்களே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

இந்த ஆண்டு சிந்தனை முகாம் மணிப்பூரில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக கோப்பைகளை வென்று மூவர்ணக் கொடியின் புகழை மேலும் உயர்த்தியுள்ளனர். இந்தப் பகுதியின் உள்ளூர் விளையாட்டுகளான சாகோல் கஞ்சாய், தங்-டா, யூபி லக்பி, முக்னா மற்றும் ஹியாங் தன்பா போன்றவை தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளன. நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மணிப்பூரும், வடகிழக்கு மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.    மணிப்பூரின் ஊ-லவாபி விளையாட்டு கபடியைப் போன்றது. இதேபோல் ஹியாங் தன்னபா விளையாட்டு கேரள மாநிலத்தில் நடத்தப்படும் படகுப் போட்டியை போன்றது. போலோ எனப்படும் குதிரையேற்றத்துடன் மணிப்பூர் மாநிலம் வரலாற்று ரீதியிலான நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது.  அத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணங்களை சேர்த்து இருப்பதுடன் விளையாட்டுப் பன்முகத்தன்மைக்கும் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன. சிந்தனை முகாமின் இறுதியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுவார்கள்.

நண்பர்களே,

எந்த ஒரு சிந்தனை முகாமும் சிந்தனைகளில் தொடங்கி ஆலோசனைகளின் மூலம் தொடரப்பட்டு செயலாக்கத்தில் நிறைவடைகிறது. எதிர்கால இலக்குகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் முந்தைய மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் செயலாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். 2022-ம் ஆண்டு கெவாடியாவில் நடைபெற்ற முந்தையக் கூட்டத்தில் பல முக்கியமான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் விளையாட்டு சூழல் அமைப்பை மேலும் சிறந்ததாக மாற்றியமைப்பது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது. விளையாட்டுத்துறையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு  அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிறந்த முன்னேற்றங்கள் சாத்தியமாகும்.  இந்த ஆய்வுகள், கொள்கை மற்றும் திட்டங்கள் என்ற அளவில் மட்டும் எடுத்துச் செல்லப்படாமல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முந்தைய ஆண்டு சாதனைகள் என்பதன் அடிப்படையிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு இந்திய தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனைப்படைத்துள்ளனர். அவர்களின் சாதனையைக் கொண்டாடும் வேளையில், நிதியுதவியையும், பரிசுகளையும் வழங்கி ஆதரவுக் கரம் நீட்டுவது அவசியம். உலகப்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, ஆசியான் சாம்பியன் கோப்பை ஹாக்கி, ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்குதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அனைத்து துறைகளும், வழிவகை செய்து கொடுத்துள்ளன. வீரர்கள், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைகளை செய்துகொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து வீரர்களை மீட்பதற்கு மாறுப்பட்ட அணுகுமுறையை அனைத்து அமைச்சகங்களும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். விளையாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமான உத்திகளை கையாள வேண்டியது அவசியம். அதே நேரத்தில், கால்பந்தாக இருந்தாலும் சரி, ஹாக்கியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு போட்டியின் சூழலுக்கேற்ற வகையில், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவேண்டியது அவசியமாகும்.

நண்பர்களே,

உடல் தகுதி என்பது விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை உள்ளூர் விளையாட்டுகளில் அதிக அளவில் பங்கேற்பதன் மூலம், போட்டிக்கான பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில், எந்தவொரு வீரரின் விளையாட்டுத்திறமையையும் நிராகரிக்கப்படவில்லை என்பதை விளையாட்டு அமைச்சகம் உறுதி செய்யவேண்டும்.

நண்பர்களே,

நாட்டில் உள்ள ஒவ்வொரு திறமையான விளையாட்டு வீரருக்கும், தரமான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை ஆகும். இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கேலோ இந்தியா திட்டம், மாவட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நிச்சயம் மேம்படுத்தும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானது. தேசிய இளைஞர் திருவிழா என்பது, மாநில அளவில் வெறும் சம்பிரதாயமாக நடத்தப்படாமல், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாக மாற்றப்பட வேண்டும். எல்லா விளையாட்டுக்களிலும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் போது, இந்தியா தன்னை ஒரு முன்னணி விளையாட்டு நாடாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.

நண்பர்களே,

 

வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் தேசத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்கின்றன. ரூ.400 கோடி மதிப்பிலான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், தற்போது வடகிழக்கு மாநிலங்களை மேம்பாட்டிற்கான புதிய திசையில் பயணிக்கச் செய்துள்ளன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை எதிர்காலத்தில்  நிச்சயம் உருவாக்கித் தரும். இதற்கு, கேலோ இந்தியா திட்டம், ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும். வடகிழக்கு மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படும். இந்த முயற்சிகள், விளையாட்டு உலகத்தில் புதிய இந்தியாவிற்கான அடித்தளமாக அமையும். நாட்டிற்கு புதிய அடையாளத்தைத் தரும். இந்த முயற்சிகளை வேகமாக செயல்படுத்த அனைத்து மாநிலங்களின் துறை சார்ந்த வல்லுநர்களும் முன்வரவேண்டும். இதற்கு இத்தகைய சிந்தனை முகாம்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.  இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

***

(Release ID: 1919031)

AD/SMB/AG/RR



(Release ID: 1919236) Visitor Counter : 127