நிதி அமைச்சகம்

ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் "கொள்கைக் கண்ணோட்டம்: கிரிப்டோ சொத்துக்கள் குறித்து பொதுக் கொள்கைக்கான பாதை பற்றி விவாதித்தல்" என்ற குழு விவாதம்

Posted On: 25 FEB 2023 12:47PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் என்பது  "வசுதைவ குடும்பகம்" அல்லது "ஒரே  பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருப்பொருளில் அமைந்துள்ளது, இது சமமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்தின் செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த இலக்கை அடைவதற்கு, நிதித் துறையை மாற்றியமைக்க, அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறையை ஊக்கப்படுத்த, நிதிச் சந்தை செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் நிதித்துறை ஒழுங்குமுறை சீர்திருத்தங்களில் இந்திய தலைமைத்துவத்தின் முன்னுரிமை டிஜிட்டல் நிதி அமைப்பை மிகவும் திறமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதாகும்.

உலகம் முழுவதும் விரைவான கிரிப்டோ பரிணாம வளர்ச்சி இருந்தபோதிலும், கிரிப்டோ சொத்துக்களுக்கு  விரிவான உலகளாவிய கொள்கைக் கட்டமைப்பு இல்லை. கிரிப்டோ சொத்துக்களுக்கும் பாரம்பரிய நிதித் துறைக்கும் இடையே உள்ள அதிக தொடர்பு மற்றும் கிரிப்டோ சொத்துகளைச் சுற்றியுள்ள சிக்கலான  மற்றும் நிலையற்ற தன்மை  காரணமாக, கொள்கை வகுப்பாளர்கள் கடுமையான ஒழுங்குமுறைக்கு அழைப்பு விடுக்கின்றனர். நிதி நடவடிக்கை பணிக்குழு, நிதி நிலைத்தன்மை வாரியம், பணம் செலுத்துதல்  மற்றும் சந்தை உள்கட்டமைப்புகளுக்கான குழு , சர்வதேச பத்திர ஆணையங்களின் அமைப்பு மற்றும் வங்கி மேற்பார்வைக்கான பேசல் (Basel) குழு ஆகியவை அந்தந்த நிறுவன ஆணைகளுக்குள் பணிபுரிந்துகொண்டே, ஒழுங்குமுறை நிகழ்ச்சி நிரலையும்  ஒருங்கிணைத்து வருகின்றன.

நிதி ஒருமைப்பாடு சம்பந்தப்பட்டதற்கு அப்பால் கிரிப்டோ சொத்துக்கள் பற்றிய ஜி20 விவாதத்தை விரிவுபடுத்தவும், பொருளாதாரத்தில்,  மேக்ரோ பொருளாதார தாக்கங்கள் மற்றும் பரவலான கிரிப்டோ ஏற்பு  ஆகியவற்றை அறியவும் முடியும் என்று இந்தியா நம்புகிறது. கிரிப்டோ சொத்துக்களின் உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்குத்  தரவு அடிப்படையிலான மற்றும் தகவலறிந்த அணுகுமுறை இதற்குத்  தேவைப்படும், இது ஜி 20 உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான கொள்கையை  வடிவமைக்க அனுமதிக்கிறது.

கிரிப்டோ சொத்துக்களின் பரந்த பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மை தாக்கங்கள் குறித்து கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரிவிக்க, பெங்களுருவில் 2023, பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 2வது ஜி20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஒரு விவாதக் குறிப்பைத்  தயாரிக்குமாறு  சர்வதேச செலாவணி  நிதியத்தை இந்தியத்  தலைமை  கேட்டுக்கொண்டது.  மேற்படி சந்திப்பின் போது, கிரிப்டோ சொத்துக்களைப் பற்றிய உரையாடலை விரிவுபடுத்த தலைமைத்துவ  முயற்சிகளின் ஒரு பகுதியாக, “கொள்கைக் கண்ணோட்டங்கள்: கிரிப்டோ சொத்துக்கள் குறித்து பொதுக் கொள்கைக்கான பாதை பற்றி விவாதித்தல்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது  விவாதக் கட்டுரையை சமர்ப்பித்த ஐஎம்எஃப்  உரையாளர், திரு. டொமாசோ மான்சினி கிரிஃபோலி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் உள் மற்றும் வெளிப்புற நிலைத்தன்மை மற்றும் அதன் நிதி முறைக் கட்டமைப்பில் கிரிப்டோ ஏற்பின் விளைவுகளை எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் ஜி 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இந்த பிரிவில் பணிபுரியும் பிரபல நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

***

SRI / SMB / DL



(Release ID: 1902300) Visitor Counter : 183