பிரதமர் அலுவலகம்

புதுதில்லியின் மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆதி மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

“விடுதலையின் அமிர்த பெருவிழாவின்போது இந்தியாவின் பிரமிப்பூட்டும் பழங்குடி கலாச்சாரத்தை ஆதி மகோத்சவம் பறைசாற்றுகிறது”

“ ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தோடு 21-வது நூற்றாண்டின் இந்தியா முன்னேறுகிறது”

“பழங்குடி சமூகத்தினரின் நலனும் தனிப்பட்ட முறையில் என்னை பாதித்த, உணர்வுபூர்வமான விஷயம்”

“பழங்குடி பாரம்பரியங்களை நான் மிக அருகில் இருந்து கண்டிருப்பதோடு, அவர்களுடன் வாழ்ந்திருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றிருக்கிறேன்”

“தனது வளமான பழங்குடி சமூகத்தின் மீது இதுவரை இல்லாத பெருமிதத்தோடு நாடு தற்போது முன்னேறுகிறது”

“நாட்டின் எந்த ஒரு மூலையில் வசிக்கும் பழங்குடி குழந்தைகளின் கல்விக்குதான் எனது முன்னுரிமை”

“ஒடுக்கப்பட்டவர்களது மேம்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளிப்பதால் நாடு புதிய உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது”

Posted On: 16 FEB 2023 1:21PM by PIB Chennai

ஆதி மகோத்சவம் என்ற பிரம்மாண்டமான தேசிய பழங்குடி திருவிழாவை தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை தேசிய அளவில் எடுத்துரைக்கும் இந்த முயற்சி, பழங்குடி கலாச்சாரம், கலைப் பொருட்கள், உணவு, வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலைகளின் உணர்வைப் போற்றுகிறது. இது, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பால் (ட்ரைஃபெட்) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.

திருவிழாவிற்கு வருகை தந்த பிரதமர், பகவான் பிர்சா முண்டாவிற்கு மலர் மரியாதை செலுத்தியதோடு, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த விற்பனையகங்களைப் பார்வையிட்டார்.

 நிகழ்ச்சியில் பேசிய அவர், விடுதலையின் அமிர்த பெருவிழாவின்போது இந்தியாவின் பிரமிப்பூட்டும் பழங்குடி கலாச்சாரத்தை ஆதி மகோத்சவம் பறைசாற்றுகிறது என்று கூறினார். இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் மதிப்புமிக்க காட்சிப் படத்தை எடுத்துரைத்த பிரதமர், பல்வேறு சுவைகள், வண்ணங்கள், அலங்காரங்கள், பாரம்பரியங்கள், கலை மற்றும் கலை வடிவங்கள், உணவு மற்றும் இசை ஆகியவற்றைக் காணும் வாய்ப்பைப் பெற்றதில் தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஒற்றுமையை நிலைநிறுத்தும் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பெருமையை ஆதி மகோத்சவம் காட்சிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். “வானவில்லின் நிறங்களைப் போல இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆதி மகோத்சவம், எல்லையற்ற வானத்தைப்போன்றது”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.  வானவில்லின் நிறங்கள் ஒன்று சேர்வதற்கு ஒப்பாக, எல்லையற்ற பன்முகத்தன்மைகள், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற கோட்டில் இணையும்போதுதான் இந்தியாவின் பிரம்மாண்டம்  வெளிப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உலகையும்  இந்தியா வழிகாட்டுகிறது என்றும் அவர் கூறினார். கலாச்சாரத்துடன் இணைந்த வளர்ச்சி என்ற எண்ணத்துக்கு உத்வேகம் அளித்து ஆதி மகோத்சவம் திருவிழா இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியா ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற மந்திரத்துடன் முன்னேறி வருவதாகப் பிரதமர் கூறினார்.  தொலைதூரம் என்று கருதப்பட்ட இடம் தற்போது அரசு தாமாக அங்கே சென்று அதனை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். ஆதி மஹோத்ஸவ் போன்ற நிகழ்வுகள் நாட்டின் இயக்கமாக மாறி வருகின்றன என்றும் பலவற்றில் தாமே பங்கேற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.  பழங்குடி சமூகத்தினரின் நலன் தமக்கு நெருக்கமான விஷயம் என்றும் உணர்வுபூர்வமானது என்றும் குறிப்பிட்ட பிரதமர், தாம் சமூக சேவகராக இருந்த நாட்களில் பழங்குடி சமூகத்தினருடன் தமது நெருக்கமான இணைப்பை நினைவுகூர்ந்தார். உங்களின் பாரம்பரியங்களை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவற்றுடன்  வாழ்ந்திருக்கிறேன். அவற்றில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்த பிரதமர், உமர்காமில் இருந்து அம்பாஜி வரையிலான பழங்குடியின சமூகப்பகுதியில் தமது வாழ்க்கையின் பல ஆண்டுகள் கழிந்ததை நினைவுகூர்ந்தார்.  பழங்குடியினர் வாழ்க்கை நாட்டையும், அதன் பாரம்பரியங்களையும் பற்றி தெரிந்துகொள்ள பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு பிரமுகர்களுக்கான தமது அன்பளிப்புகளில்  பழங்குடியினர் தயாரிப்பு பொருட்கள் பெருமைமிக்க இடத்தை பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு பழங்குடி மக்களின் வாழ்க்கையில் இந்தியா தீர்வுகளை வழங்குவதாகப் பிரதமர் கூறினார்.  நீடித்த வளர்ச்சி தொடர்பாக உத்வேகம் அளிக்கவும், பயிற்றுவிக்கவும் இந்தியாவின் பழங்குடி சமூகம் ஏராளமான விஷயங்களை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பொருட்களைப் பிரபலப்படுத்தும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், இந்தப் பொருட்கள் அதிகபட்ச சந்தையை அடைந்து, அவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்து தேவையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டினார்.  முந்தைய அரசு மூங்கில் வெட்டுவதையும், அதனை பயன்படுத்துவதையும் தடை செய்திருந்தது. ஆனால் இப்போதுள்ள அரசு மூங்கிலைப் புல்வகையில் சேர்த்து தடையை ரத்து செய்துள்ளது என்று பிரதமர் கூறினார். வன் தன்  இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்த பிரதமர், பல்வேறு மாநிலங்களில் 3000-க்கும் அதிகமான வன் தன் மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.  நாட்டில் செயல்படும் 80 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவி குழுக்களில் சுமார் 1.25 கோடி பழங்குடியினர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று  அவர் தெரிவித்தார்.

 இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி பேசிய பிரதமர், பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் வழங்குவதற்கும்,  அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், விஸ்வகர்மா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை  எடுத்துரைத்தார்.

பழங்குடியின மக்களின் குழந்தைகள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் கல்வியும், எதிர்காலமும் எனது முன்னுரிமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.  2004-2014 இடையே இருந்த 80  ஏக்லாவியா மாதிரி உறைவிடப்பள்ளிகள் 2014 முதல் 22 வரையிலான காலத்தில் 5 மடங்கு அதிகரித்து  500 ஆகியிருக்கின்றன என்று அவர் கூறினார்.  இவற்றில் 400 பள்ளிகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன என்றும், சுமார் 1 லட்சம் குழந்தைகள் கற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப்பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்களும், ஊழியர்களும் நியமிக்கப்படவிருப்பதாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மாணவர்களுக் கான  கல்வி உதவித்தொகை  இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின இளைஞர்கள் மொழித் தடைகளால் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து பேசிய பிரதமர், புதிய கல்விக்கொள்கை மூலம் அந்த இளைஞர்கள் தாய்மொழியிலேயே கற்க முடியும் என்று தெரிவித்தார்.  நமது பழங்குடியின குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தமது தாய்மொழியிலேயே கற்பதன் மூலம் அவர்களுடைய வளர்ச்சி தற்போது இயல்பான ஒன்றாக பிரதமர் கூறினார்.

     நாடு புதிய உச்சத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், விளிம்புநிலை மக்களின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். கடைக்கோடியில் உள்ள மனிதருக்கு நாடு முன்னுரிமை அளிக்கும் போது வளர்ச்சியின் பாதை தாமாகவே வெளிப்படுவதாகக் கூறினார். முன்னோடி மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் திட்டம் தொடர்பாக எடுத்துரைத்த பிரதமர், அவற்றில் பெரும்பாலானவை பழங்குடி மக்கள் வசிப்பவையாகும் என்று தெரிவித்தார்.   இந்த ஆண்டு பட்ஜெட்டில் 2014 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமாக பழங்குடியின மக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். தனிமைப்படுத்துதல் மற்றும் புறக்கணிப்பு காரணமாக ஒதுங்கியிருந்த இளைஞர்கள் தற்போது இணையதளம் மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக அவர் கூறினார். அனைவருடன், அனைவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் என்ற பாதை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிமக்களை சென்றடைவதாகத் தெரிவித்தார்.  இது பழைய மற்றும் நவீனத்துவத்தின் சங்கம ஒலி புதிய இந்தியாவை நிலைத்து நிற்கச்செய்யும்.

     கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளில் பழங்குடியின சமுதாயத்தின் பயணம் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இது நாடு சமவாய்ப்புக்கும், நல்லிணக்கத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருவதால், ஏற்பட்ட மாற்றம் என்பதற்கு சான்றாகும் என்று கூறினார்.  இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் முதன் முறையாக பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியதன் மூலம் இந்தியாவை பெருமையடையச் செய்வதாகத் தெரிவித்தார்.  நாட்டில் முதன் முறையாக பழங்குடியின சமுதாயத்தின் வரலாற்றில் தகுதியுடைவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

     இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், வரலாற்றின் பக்கங்களில் அவர்களுடைய தியாகங்கள் மற்றும் துணிச்சல்களின் மதிப்புமிக்க அத்தியாயங்களை பல ஆண்டுகளாக மூடிமறைக்கும் முயற்சி நடைபெற்றதாக கவலைத் தெரிவித்தார். இந்த மறைக்கப்பட்ட அத்தியாயங்களை அமிர்தப் பெருவிழா மூலம் மீண்டும் நினைவுபடுத்துவதற்கு நாடு நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.  முதன் முறையாக பகவான் பிர்ஸா முண்டா பிறந்த தினத்தை நாடு பழங்குடியின பெருமை தினமாகக் கொண்டாடத் தொடங்கியது என்று அவர் கூறினார்.  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகவான் பிர்ஸா முண்டா அருங்காட்சியகத்தை திறந்துவைத்து அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் நினைவுகூர்ந்தார்.  அந்த அருங்காட்சியகம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.  முதன் முறையாக இது நடைபெற்றாலும் கூட, இதன் தாக்கம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு உற்சாகமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.  இது புது உத்வேகம் அளித்து பல நூற்றாண்டுகளுக்கு நாட்டிற்கு வழிகாட்டக் கூடியதாக அமையும் என்றும் பிரதமர் கூறினார்.  

“கடந்த காலத்தை நாம் பாதுகாக்கவேண்டும். நிகழ்காலத்தில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது எதிர்கால கனவுகளை நனவாக்கவேண்டும் என்று கூறிய பிரதமர், இந்த ஆதி மஹோத்ஸவ போன்ற கொண்டாட்டங்கள் இந்த தீர்மானங்களை முன்னெடுத்து செல்லும் வலிமைகொண்டது” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பல நூற்றாண்டுகாலங்களாக பெரிய தானிய வகைகள் பழங்குடியின மக்களின் உணவாக திகழ்ந்து வருகிறது. இந்தத் திருவிழாவில் இடம்பெற்றிருக்கும் உணவு விற்பனை செய்யும் கடைகள் ஸ்ரீ அண்ணாவின் சுவையையும், மணத்தையும் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பழங்குடியின மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதன்மூலம் மக்களின் உடல்நலம் மேன்மை பெறுவதோடு பழங்குடியின மக்களின் வருவாயை அதிகரிக்கும். இறுதியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது வளர்ந்த இந்தியா என்ற கனவு மெய்ப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திரமோடி கூறினார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா, மத்திய பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திருமதி. ரேணுகா சிங் சுருத்தா, மத்திய பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு, மத்திய ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர்   திரு ஃபக்கன்சிங் குலஸ்தே, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவா மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் தலைவர் திரு. ஸ்ரீ ராம்சிங் ரத்துவா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி

நம் நாட்டின் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதமர் முன்னுரிமை அளித்து வருவதோடு, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பழங்குடியினர் அளிக்கும் பங்களிப்பிற்கு உரிய மரியாதையையும் அளித்து வருகிறார். பழங்குடியினரின் கலாச்சாரத்தை தேசிய அளவில் முன்னிலைப்படுத்துவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி “ஆதி மகோத்ஸவ” என்ற மிகப்பெரிய அளவிலான தேசிய பழங்குடியினர் திருவிழாவை புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைக்கலை, உணவு பழக்கவழக்கங்கள், வர்த்தகம், மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் விதமாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை சார்பாக பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு “ஆதி மகோத்ஸவ” திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 16 முதல் 27ம் தேதிவரை இந்த திருவிழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ள 200 நிலையங்களில், நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினரின் வளமையான மற்றும் பண்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் சுமார் 1,000 பழங்குடியின கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த 2023 ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கைவினைப்பொருட்கள், கைத்தறி, மண்பாண்டங்கள், நகைகள் போன்றவற்றோடு பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட ஸ்ரீ அண்ணா பயிர்வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

***

(Release ID: 1899762)

SRI/RB/SMB/IR/GS/KRS



(Release ID: 1899848) Visitor Counter : 208