மத்திய அமைச்சரவை

வேளாண்மை மற்றும் துணைத் தொழில்களில் ஒத்துழைப்பதற்கு இந்தியா-சிலி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 15 FEB 2023 3:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்  வேளாண்மை மற்றும் துணைத் தொழில்களில் ஒத்துழைப்பதற்கு இந்தியா-சிலி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

     இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க, நவீன வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளில் ஒத்துழைப்பு அளிப்பதாகும்.  மேலும், இருநாடுகளிலும் இயற்கை வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை பரிமாற்றம் செய்து கொள்வதை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.  இந்தியாவிலும், சிலியிலும் உள்ள கல்விக் கழகங்களில் வேளாண்துறை சார்ந்த அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் பங்களிப்புகளை கண்டறிவதும் பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

     இந்த ஒப்பந்தத்தின்கீழ், சிலி-இந்தியா வேளாண் பணிக்குழு அமைக்கப்படும்.  இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை மேற்பார்வையிடுதல், ஆய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கும் அதேபோல், தொடர்ச்சியான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை நிறுவுவதற்கும் இது பொறுப்பாகும்.

     இந்தப் பணிக்குழுவின் கூட்டங்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிலியிலும், இந்தியாவிலும் நடைபெறும். இதனை செயல்படுத்துவதற்கு கையெழுத்தாகும் தேதியிலிருந்து 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். அடுத்த 5 ஆண்டுகாலத்திற்கு தாமாகவே புதுப்பிக்கப்படும்.

***

 

AP/SMB/UM/PK



(Release ID: 1899642) Visitor Counter : 130