பாதுகாப்பு அமைச்சகம்

ஏரோ இந்தியா 2023-ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி, உறுதிப்பாடு மற்றும் உற்சாகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு

Posted On: 15 FEB 2023 1:25PM by PIB Chennai

     ஏரோ இந்தியா 2023-ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிகழ்ச்சியான மந்தனில் இன்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி, புதிய உறுதிப்பாடு, மற்றும் புதிய உற்சாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப  கட்டமைப்பை பின்பற்றுவதில் ஆர்வத்துடன் உள்ளதாகவும் இது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என்றும் கூறினார். அனைத்து துறைகளிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பாராட்டு தெரிவித்த அவர் இவற்றின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளதுடன் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவை யூனிகார்ன் நிறுவனங்களாக உள்ளன என்றார். இனணயதளப் பாதுகாப்பு தொடர்பான டிஸ்க்- 9 என்ற ஒன்பதாவது பாதுகாப்பு ஸ்டார்ட்அப் சவாலையும், பாதுகாப்பு உயர் திறமைகளுக்கான புதுமைகள் (ஐடெக்ஸ்) முதலீட்டாளர் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு புதுமைகள் அமைப்பின் கீழ் ஐடெக்ஸ் முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது நாடு முழுவதும் உள்ள திறன்களை வெளிக்கொண்டுவரும் என்றும் திரு. ராஜ்நாத்சிங் கூறினார். இளைஞர்களின் புதுமைத் திறன்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர், இதன் மூலம் அவர்களை வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதனால் உள்நாட்டிலேயே பாதுகாப்பு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் நமது இறக்குமதி சார்பு குறையும் என்றும் அவர்  தெரிவித்தார். ஸ்டார்ட்அப் மந்தன் நிகழ்ச்சியில் உற்சாகமாக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்த அவர், புதுமைக் கண்டுபிடிப்புகளில் உலகின் களங்கறை விளக்கமாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் கூறினார். இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திருவிழா என்றும் ஐடெக்ஸ்-சின் வெற்றியை உணர்த்துவதாவும் அவர் கூறினார். ஐடெக்ஸ் பல உள்நாட்டு தொழில்நுட்பங்களின் மேம்பாட்டுக்கு உதவுவதாக அவர் கூறினார். அத்துடன் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப  மேம்பாடுகளை காட்சிப்படுத்த முக்கியமான தளத்தை இது வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

ஐடெக்ஸ், பல புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூரிய அவர் இது பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். ஸ்டார்ட்அப்கள் மற்றும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களிடமிருந்து, கொள்முதல் நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் எளிமைப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஐடெக்ஸ் பங்களிப்பதாக தெரிவித்த திரு. ராஜ்நாத் சிங் தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்க அரசு  உறுதிபூண்டுள்ளது என்றார்.

பாதுகாப்பு புதுமைக் கண்டுபிடிப்பு அமைப்பு (DIO) மந்தன் நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, செய்துகொண்டது. இஸ்ரோ, இன்ஸ்பேஸ், இஸ்பா ஆகியவற்றுடன் பாதுகாப்புத்துறையின் விண்வெளி முயற்சிகளை வலுப்படுத்துவது    தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆக்ஸிஸ் வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எல்லை சாலை அமைப்புடன் மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உள்நாட்டுப் பாதுகாப்பு ஆராய்ச்சி, வடிவமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி தொர்பான ராணுவத்தின்   சிக்கல் தீர்ப்பு குறித்த அறிக்கைகளையும் இந்த நிகழ்ச்சியின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டார். மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899379

***

AP/PLM/JJ/PK



(Release ID: 1899453) Visitor Counter : 124