பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-இல் பிரதமரின் உரை

Posted On: 10 FEB 2023 2:33PM by PIB Chennai

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேஷவ் பிரசாத் அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, தொழில்துறை உறுப்பினர்களே, உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தாய்மார்களே அன்பர்களே!

உத்தரப்பிரதேச மாநிலம் தனது கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றுள்ளது. இந்த மாநிலம் வளர்ச்சி அடைவது மிகவும் கடினம் என்று மக்கள் கூறி வந்தனர். ஆனால் வெறும் ஐந்து- ஆறு ஆண்டுகளிலேயே உத்தரப்பிரதேசம் தனக்கென புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தற்போது சிறந்த ஆளுகை, மேம்பட்ட சட்டம் & ஒழுங்கு, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்த மாநிலம் புகழ் பெற்றுள்ளது. உலகளவில் இந்தியா இன்று சிறந்த நிலையில் இருக்கிறது என்றால், இந்தியாவின் வளர்ச்சியை உத்தரப்பிரதேசம் வழிநடத்திச் செல்கிறது.

நண்பர்களே,

உள்கட்டமைப்பிற்கு அரசு இன்று அதிக தொகையை ஒதுக்கி வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் இது மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் சமூக உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளமாக உள்ளன. குறிப்பாக பசுமை வளர்ச்சி பாதையில் இந்தியாவுடன் பயணிக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் எரிசக்தி மாற்றத்திற்காக மட்டுமே 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ராணுவத்திற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புமுறைகளை அதிகபட்ச எண்ணிக்கையில் வழங்குவதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். திணை பயிர்கள் குறித்த புதிய பிரச்சாரம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த வருடத்தை சர்வதேச திணை பயிர்கள் ஆண்டாக உலகமும் கொண்டாடி வருகிறது. எனவே ஒருபுறம் திணையின் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதோடு மறுபுறம் அதன் சர்வதேச சந்தையையும் நாங்கள் விரிவுபடுத்துகிறோம்.

உலக நாடுகளின் வளம் இந்தியாவின் செழிப்பை சார்ந்துள்ளது. இந்தப் பயணத்தில் உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியம். உங்களது கனவை நினைவாக்குவதில் உத்தரப்பிரதேச நிர்வாகமும், அரசும் முழு ஈடுபாடு  கொண்டுள்ளது என்பதை இம்மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.   முதலீட்டாளர்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை வரவேற்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

(Release ID: 1897929)

MSV/RB/RR



(Release ID: 1899084) Visitor Counter : 183