எரிசக்தி அமைச்சகம்

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாறுபாட்டிற்கு எதிராக ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் அழைப்பு

Posted On: 05 FEB 2023 4:47PM by PIB Chennai

புதுதில்லி, பிப்ரவரி 05, 2023உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு சவால்களை முறியடிக்கும் முயற்சியில் ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் என மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று துவங்கிய முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக் கூட்டத்தில்  உரையாற்றிய அவர், 2005 முதல் 2030ம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 2030ம் ஆண்டிற்குள், நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தித்திறனை, புதைப்படிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான  எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். 

பருவநிலை மாறுபாடு குறித்த செயல் குறியீட்டில், இந்தியா தற்போது  முதல் 5 நாடுகளுக்குள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் பல்வேறு எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் வாயிலாக, நாட்டின் கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 267.9 மில்லியன் டன்னாக இருப்பதாகவும், இதன்மூலம், 18.5 பில்லியன் டாலர் நிதி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ஆர்.கே. சிங், தற்போது நடைமுறையில் கொண்டுள்ள எரிசக்தி தளத்தை இந்தியா எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், எரிசக்தி  பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து வளங்களையும் ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய, மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் திரு. பிரஹலாத் ஜோஷி, சுத்தமான எரிசக்திக்கான உலகளாவிய அணுகுமுறையை அடைய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். இந்தியர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை முறையையும், இயற்கைவளம் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்டார். குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்றதே வாழ்வின் தாரக மந்திரம். நமது கலாச்சாரமும், வாழ்வியல் முறையும் சுற்றுப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த அம்சங்கள் என்றும்  அமைச்சர் கூறினார்.

எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், ஜி-20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.  ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

இக்கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை தலைவர் ரெனால்டோ டோமித்  காடின்ஹோ, பிரேசில்  வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. அலோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜி 20 உறுப்பு நாடுகள் உட்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள், 9 சிறப்பு அழைப்பாளர்கள், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

------

PKV/ES/KPG



(Release ID: 1896465) Visitor Counter : 244