தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஸ்சிஓ திரைப்படவிழாவின் மாஸ்டர்கிளாஸ் பிரிவில் இந்திய அனிமேஷன் வரலாறும் எதிர்காலமும் என்ற நிகழ்வு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2023 3:48PM by PIB Chennai

மும்பையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) திரைப்படவிழாவின் 4-ம் நாளில் இந்திய அனிமேஷன் வரலாறும் எதிர்காலமும் என்ற நிகழ்வை தேசிய விருது பெற்ற  திரைப்படத் தயாரிப்பாளர் கிரீத் குரானா நடத்தினார்.  இந்தியாவில் அனிமேஷன் திரைப்படத்  தயாரிப்பில் வளர்ச்சிப் பயணத்தோடு பார்வையாளர்களை கிரீத் குரானா அழைத்துச் சென்றார். இந்தியாவில் அனிமேஷன் தொழில்துறை தொடங்கியதில் க்ளேர் வீக்சின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைத்த கிரீத், அவரது வழியில் இந்திய அனிமேஷன் தொழில்துறையில் பிதாமகராக ராம் மோகன் வளர்ச்சி அடைந்தது எவ்வாறு என்பதையும் எடுத்துரைத்தார்.

மும்பையில் உள்ள திரைப்படப்பிரிவு வளாகத்தில் 1955-ஆம் ஆண்டு கார்ட்டூன் திரைப்படங்கள் பிரிவை அரசு உருவாக்கியதன் மூலம் இந்திய அனிமேஷன் திரைப்படப் பயணம் தொடங்கியது. இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் முதலாவது அனிமேஷன் திரைப்படமான  பேனியன் டீர் உள்ளிட்ட பல விருது பெறும் படங்களை ராம்மோகன் தயாரித்தார். இந்தத் துறையில் பீம் சென், வி ஜி சமந்த் ஆகியோர் இதர முக்கியத் தயாரிப்பாளர்களாவர். மீனா மற்றும் அவரது கிளி மித்தூ பாத்திரங்களுடன் 1992-ல் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படம், இந்திய அனிமேஷன் தொழில்துறைக்கு பெரும் பாய்ச்சல் வேகத்தை தந்தது. பெண் சிசுக்கொலையைத் தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த யுனெஸ்கோ உதவியுடன் இது தயாரிக்கப்பட்டது. ஜப்பான் உதவியுடன்  தயாரிக்கப்பட்ட மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அனிமேஷன் திரைப்படமாக “ராமாயணா” இருந்தது.

அனிமேஷன் திரைப்படத் தொழில்துறையின் புதிய அவதாரமாக நவீன காலத்தில் விஎஃப்எக்ஸ் உருவாகியிருப்பது பற்றி கிரீத் குரானா விவரித்தார். இந்தவகை திரைப்படத் தொழில்துறையில் தற்போதுள்ள 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்புள்ள வளர்ச்சி 2030-க்குள் 40 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

----- 

AP/SMB/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1894745) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Marathi