நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற செயல்பாடுகள்: ஆண்டு இறுதிக் கண்ணோட்டம் - 2022


2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 16 மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது

Posted On: 31 DEC 2022 10:55AM by PIB Chennai

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்,   நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அரசுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறது. மே, 1949-ல் தனித் துறையாக இது உருவாக்கப்பட்டது. அதிக பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட முழு அளவிலான அமைச்சகமாக இது பின்னர் மாறியது. நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள், அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பிற அமைப்புகளை உள்ளடக்கிய வகையில் குடிமக்கள் சேவைகளை வழங்க இந்த அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டில் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை) நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகளில் சில:

* 2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 16 மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

* நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31, 2022 முதல் ஏப்ரல் 7, 2022 வரை நடைபெற்றது. இடையில், இரு அவைகளும் 11 பிப்ரவரி 2022 அன்று  ஒத்திவைக்கப்பட்டு 2022 மார்ச் 14-ல் மீண்டும் கூடின.

* பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் 10 அமர்வுகளில் நடைபெற்றது.

* கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 17 அமர்வுகள் நடைபெற்றன.

* 2022 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ​​மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் 27 அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளின்போது, ​​மொத்தம் 13 மசோதாக்கள் (மக்களவையில் 12 மற்றும் மாநிலங்களவையில் 1) அறிமுகப்படுத்தப்பட்டன.

* பட்ஜெட் கூட்டத் தொடரில் 13 மசோதாக்கள் மக்களவையிலும், 11 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

* நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், ஜூலை 18, 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை நடைபெற்றது.

* மழைக் காலக் கூட்டத் தொடர் 22 நாட்களில் 16 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின்போது, ​​6 மசோதாக்கள்  மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

* மழைக்காலக் கூட்டத் தொடரில் 7 மசோதாக்கள் மக்களவையிலும், 5 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

* மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 5 ஆகும். மக்களவையில் ஒரு மசோதா திரும்பப் பெறப்பட்டது.

* நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன் என்ற செயலியின் செயல்பாடு தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நேஷனல் இ-விதான் அப்ளிகேஷன் (NeVA) என்பது நாடாளுமன்றத்தின் 2 அவைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து 39 அவைகளையும் (மக்களவை, மாநிலங்களவை, 31 சட்டமன்றங்கள், 6 கவுன்சில்கள்) ஒருங்கிணைப்பதற்கான ஒரு நேரடி இருமுனை கிளவுட் அடிப்படையிலான டிஜிட்டல் தீர்வாகும். 

*நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்கள் நவம்பர் 2022 வரை அறுபது கூட்டங்களை நடத்தியுள்ளன.

* 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், கவுன்சில்கள், வாரியங்கள் போன்றவற்றில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* பல்வேறு கல்வி நிறுவனங்களில் இளைஞர் நாடாளுமன்ற போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன

* 75-வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அரசியலமைப்பு தினத்தை நவம்பர் 26, 2022  அன்று கொண்டாடியது.  அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் பங்களிப்பைப் போற்றவும் மற்றும் அங்கீகரிக்கவும் இது  கொண்டாடப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாட்டங்களை நடத்தும் நோக்கில், 26.11.2022 அன்று காலை 11:00 மணிக்கு அரசியலமைப்பின் முகப்புரையை மக்கள் வாசிப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

* நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தனது இரண்டு இணையதளங்களையும் மறுசீரமைத்துப் புதுப்பித்தது, அரசியலமைப்பின் முகப்புரையை 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க வழி வகை செய்திருந்தது. கடந்த ஆண்டு 6.45 லட்சம் பேர் பங்கேற்றிருந்த நிலையில், உலகம் முழுவதிலுமிருந்து 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆண்டு இந்த இரண்டு இணையதளங்களிலும் பங்கேற்று அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்தனர்.

******

MS/PLM/DL



(Release ID: 1887724) Visitor Counter : 643