தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
உலக மற்றும் உள்ளூர் படைப்பாளிகளை ஒன்றிணைத்து ‘வசுதைவ குடும்பகம்’ என்ற பன்முகத்தன்மையை காட்சிப்படுத்திய 53வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்
திரைப்படங்கள் மீதான அறிவார்ந்த பார்வையுடன் அதனை கண்டு களித்து, பாராட்டி அதன் மீதான தீராக்காதலை வளர்த்து, ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழா, மாபெரும் அளவில் கோவாவில் உள்ள டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் திரைத்துறையின் நட்சத்திரங்கள் மின்ன, பிரபலங்கள் ஜொலிக்க, கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நிறைவு பெற்றது.
வண்ணமயமான மற்றும் உற்சாகம் மிகுந்த பாராட்டு விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்களை வரவேற்ற, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் பேசும் போது, “இந்த 53 வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா, வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள், பெரியவர்கள், புதியவர்கள் மற்றும் ஜாம்பவான்கள் போன்றவர்களுக்கு நுட்பமான சினிமா உலகத்தை மிக அழகாவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த மாபெரும் விழா அனைவரையும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல் புத்தம் புதிய சிந்தனைகளை செம்மைப்படுத்தி, வளர்த்துள்ளது” என்றார்.
இந்த மாபெரும் திரைப்படத் திருவிழா கடந்த ஒன்பது நாட்களில், 282 திரைப்படங்கள் திரையிடப்பட்டு, 35,000 நிமிடங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. இந்த விழாவில் 65 சர்வதேச மற்றும் 15 இந்திய மொழிகளில், 78 நாடுகளில் இருந்து 183 சர்வதேச படங்களும், 97 இந்திய படங்களும் இடம்பெற்றன. மேலும் 20 க்கும் மேற்பட்ட உலக திரைப்படத்துறைச் சேர்ந்த ஆளுமைகளின் சிறந்த மாஸ்டர் கிளாஸ்கள், கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் இதர பிரபல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. உலகெங்கிலும் உள்ள படைப்பாற்றல் சிந்தனையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்த ‘வசுதைவ குடும்பகம்’ என்ற பன்முகத்தன்மை இந்த விழா மூலம் ஏற்பட்டுள்ளது என்று திரு அனுராக் தாக்கூர் கூறினார்.
பிராந்திய சினிமா இனி பிராந்தியங்களுக்கு மட்டும் அல்ல, பிராந்திய சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் வலுவான முக்கியத்துவம் அளித்து, அதன் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சர் வலியுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் முழு ஒத்துழைப்போடு, இந்தியாவில் மிகச்சிறந்த திரைப்படங்களை எடுக்கும் சூழலை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என்று அவர் கூறினார்.
“நீங்கள் மொபைல் சாதனங்களில் எடுக்கப்பட்ட குறும்படங்கள், பயணத்தின்போது காட்சிப்படுத்திய திரைப்படங்கள் அல்லது ஓடிடி தளம் போன்றவைகள் மூலம் உங்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, பார்வையாளர்களை கவர்ந்து அதே வேளையில் சிறந்த வியாபாரத்தையும் செய்து வருவதை நாங்கள் உணர்கிறோம். இந்தியாவுக்கு எப்போதுமே பலவிதமான திறமைகள் உண்டு. எந்தவித தங்கு, தடைகளுமின்றி பார்வையாளர்கள் கண்டு வெற்றியை தீர்மானிக்கும் வாய்ப்பு தேவைப்பட்டது.
இந்த மாபெரும் திருவிழாவிற்கு கோவா வருகை தந்துள்ள இஸ்ரேலிய தூதர் திரு நவர் கிலோனுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். சினிமா மற்றும் திரைப்படத் தயாரிப்பில் இஸ்ரேலுடன் இணைந்து செயலாற்றும் நிலை ஏற்பட்டு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் திரு சிரஞ்சீவிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திரு அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
************
SRI / GS / DL
(Release ID: 1879664)