அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலக விலையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் மருத்துவச் சாதனங்களை இந்தியா உற்பத்தி செய்கிறது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Posted On:
15 NOV 2022 4:18PM by PIB Chennai
உலகின் முதன்மையான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உயிர் காக்கும் மருந்துவக் கருவிகளை தயாரிப்பதாகவும் ஆனால், அவற்றின் செலவு மற்ற 4 நாடுகளின் செலவில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் , அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கருவிகள் பிரிவை தொடங்கிவைத்த பின், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், செயற்கையான இதயவால்வு, ஆக்சிஜன் செலுத்தும் கருவி போன்ற மருத்துவ உபகரணங்களை இந்த கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகத் தரத்திலான மருத்துவ உபகரணங்கள் இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களைவிட சுமார் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை குறைந்த செலவில் கிடைக்கின்றன என்று அமைச்சர் கூறினார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தில் தற்சார்புடையதாக மாறுவதற்கான பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கண்ணோட்டம் இதில் பிரதிபலிப்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.
பின்லாந்தின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பெட்ரி ஹான்கோனென் நேற்று (14.11.2022) தம்மை சந்தித்ததாகவும் கொவிட்-19 பெருந்தொற்று நிர்வாகத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியை அவர் பெரிதும் பாராட்டியதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், தடுப்பூசிகள் உற்பத்தியை உறுதி செய்தது மற்றும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கியதற்காகவும் இந்தியாவின் முயற்சிகளை அவர் பாராட்டியதாக அமைச்சர் கூறினார்.
இந்தப் பெருந்தொற்று ஒட்டுமொத்த சுகாதார கவனிப்பின் நிலைமைகளை நமக்கு கற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மற்றும் இதர மாற்று மருத்துவ முறைகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களுக்கு இந்தியா ஆராய்ச்சி செய்ததை மேலை நாடுகள் வியப்புடன் பார்க்கத் தொடங்கின என்றார்.
இந்நிறுவனத்தின் இயக்குர் டாக்டர் சஞ்சய் பிகாரி, நிதி ஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் டாக்டர் சசி தரூர் மற்றும் பல பிரபல மருத்துவர்கள் துறை சார்ந்த பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
------
SG/SMB/KPG/IDS
(Release ID: 1876197)