வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு கவுன்சிலின் 70-வது கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2022 1:05PM by PIB Chennai

குவஹாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 70-வது கூட்டத்தில் மத்திய வடகிழக்கு மாகாண‌ வளர்ச்சி, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை  அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி உரையாற்றினார். எட்டு வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களிடையே பேசிய அவர், இந்தப் பகுதியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி சம்பந்தமான பல்வேறு முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தார்.

வடகிழக்கு பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்கவும், இணைப்பை மேம்படுத்தவும் இந்திய அரசு தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாகவும், அதன் வாயிலாக குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பகுதி வளர்ச்சி அடையாமல், இந்தியாவால் முன்னேற முடியாது என்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

வடகிழக்கு பகுதிகள், அவற்றின் அமிர்த காலத்திற்குள் நுழைந்திருப்பதால் இதனை முழுவதும் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய/ மாநில முகமைகள், தனியார் துறையினர் மற்றும் இதர பங்குதாரர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றி, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், இந்தப் பகுதியில் இணைப்பை வலுப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கு சுற்றுலாவை மேம்படுத்த உள்கட்டமைப்பு, திறன் வளர்த்தல் மற்றும் திறன் கட்டமைப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். வடகிழக்கு மாகாணங்களில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1866044) வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Telugu