அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை இயக்கத்தின் புத்தாக்க செயல் திட்டத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 23 SEP 2022 11:04AM by PIB Chennai

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில் நடைபெறும் உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றத்தில், எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்தியாவின் உயர்நிலை கூட்டு அமைச்சகக் குழுவிற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை ஏற்றார்.  பிரேசில், கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து தயாரித்த ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை இயக்கத்தின் புத்தாக்க செயல் திட்டத்தை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

 சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை இந்த திட்டம் லட்சியமாக கொண்டிருப்பதாகவும், இதனை அடைவதற்கும், அரசு மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எரிசக்தி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் செயல் திறனிற்கு நிதி உதவியை அதிகரிப்பது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 7-வது புத்தாக்க இயக்கம் மற்றும் 13-வது தூய்மை எரிசக்தி அமைச்சகங்கள்- 2022 ஆகியவற்றின் உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றத்தில் “நிலையான உயிரி எரிசக்தி மற்றும் உயிரி சுத்திகரிப்பு ஆலைகள் குறித்த முதலாவது வட்டமேசை மாநாட்டில் டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்வாறு பேசினார்.

எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருவதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகளை கூட்டத்தின் போது அமைச்சர் விளக்கினார். சோதனை முயற்சியாக ஹரியானா மாநிலத்தின் பானிபட்டில் அமைக்கப்பட்டு வரும் எத்தனாலுக்கான ஒருங்கிணைந்த நொதி உற்பத்தியுடன் கூடிய 10 டன் (நாள் ஒன்றுக்கு) திறன் கொண்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு ஆலை, வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் பெருமையுடன் அறிவித்தார்.

 போக்குவரத்து துறையில் பசுமை குடில் எரிவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருட்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். உயிரி தொழில்நுட்பத் துறையின் வாயிலாக மேம்பட்ட உயிரி எரிபொருட்கள் மற்றும் கழிவு முதல் எரிசக்தி தொழில்நுட்பங்கள் வரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இந்தியா ஆதரவளித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை  காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861671

*************



(Release ID: 1861708) Visitor Counter : 187