மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மற்றும் பால்வளத்துறை சார்பில் தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் இல்லம்தோறும் மூவண்ணக் கொடி விழா கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டாக்டர் எல். முருகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்

Posted On: 12 AUG 2022 2:43PM by PIB Chennai

மத்திய அரசு நாடு முழுவதும் இல்லம்தோறும் மூவண்ணக் கொடி விழாவை, 11 ஆகஸ்ட் முதல் 15 ஆகஸ்ட் 2022 வரை கொண்டாடுகிறது. சுதந்திர தின அமிர்தப் பெருவிழா ஆண்டுக் கொண்டாட்டத்தின் கீழ், மத்திய அரசு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 400 இடங்களில், இந்த விழாவைக் கொண்டாடி வருகிறது. 

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தமிழக அரசுடன் இணைந்து, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 12 ஆகஸ்ட் 2022 அன்று இல்லம் தோறும் மூவண்ணக் கொடி விழாவைக் கொண்டாடியது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்த மத்திய இணை அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தினரை கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இந்திய சுதந்திர போராட்டத்தின்போது தங்களது இன்னுயிரை ஈந்த, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்தினேன்.  இந்த நிகழ்ச்சியின் போது சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடும் அரிய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், தமது எழுத்துக்கள் மூலம் நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய மகாகவி பாரதியாரின் சிலைக்கும் அமைச்சர் மரியாதை செலுத்தினார். மக்கள் அனைவரும் தங்கள் இல்லம்தோறும் மூவண்ணக் கொடி கொண்டாட்டத்தில் தீவிரமாக பங்கேற்குமாறும் அவர் உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி, மாபெரும் வெற்றியடைய தேவையான நிர்வாக ரீதியான அனைத்து  ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கியது. 

-------



(Release ID: 1851242) Visitor Counter : 216