தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கதை உருவாக்கம் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான உலகலாவிய மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் : தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

Posted On: 26 JUN 2022 12:56PM by PIB Chennai

 இந்தியாவில் அதிவேகமாக நடைபெற்று வரும் டிஜிட்டல் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், விஷுவல் எஃபக்ட், கேமிங் மற்றும் காமிக்ஸ்) துறைகளில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களும், ஊடக மற்றும் பொழுதுபோக்கு தொழிலில், தயாரிப்புக்குப்பிந்தைய பணிகளை மேற்கொள்வதற்கான சிறந்த மையமாக இந்தியாவை மாற்றும் திறன் கொண்டவையாக உள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

புனேயில் உள்ள சிம்பயாசிஸ் திறன் மற்றும் தொழில்சார்ந்த பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘ஊடக மற்றும் பொழுதுபோக்கு தொழிலில் மாறிவரும் சூழல் 2022’ என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றிய திரு தாக்கூர், ”நாடு முழுவதும் ஏவிஜிசி துறையில் திடமான டிஜிட்டல் அடித்தளம் இடப்பட்டு வருவதுடன், உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவைக்கு ஏற்ப, இத்துறையை உலகத்தரம் வாய்ந்த படைப்பாற்றல் திறன் மிக்கதாக மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை குழு ஒன்றை அரசு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடக மற்றும் பொழுதுபோக்கு சூழலியல், பிரகாசிக்கும் தொழில்துறையாக இருப்பதோடு, 2025ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாயும், 2030ம் ஆண்டுக்குள் ரூ.7.5 லட்சம் கோடி கொண்ட தொழில்துறையாக மாற்றும் வல்லமையை பெற்றதாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் ஒலி-ஒளி சேவைத்துறையை, 12 முன்னோடி சேவைத்துறைகளில் ஒன்றாக அரசு அறிவித்திருப்பதோடு நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய கொள்கை அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பதாக அவர் கூறினார்.

தரமான கதையம்சங்களைக்கொண்ட டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாம் அதிவேகமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், வானொலி, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறை பெருமளவு வேலை வாய்ப்புகளைக் கொண்ட துறையாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வீடியோ எடிட்டிங், கலர் கிரேடிங், விஷுவல் எஃபக்ட், சவுன்டு டிசைன், ரோடோஸ்கோபிங், 3டி மாடலிங் போன்ற புதிதாக உருவெடுக்கும் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

கொவிட் பெருந்தொற்று காலத்திலும் சுமார் 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு அனுராக் தாக்கூர், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் மற்றும் சத்யஜித்ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் போன்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களிலிருந்து உருவாகும் திறமைவாய்ந்த படைப்பாளிகள், மேலும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837074

                         ***************



(Release ID: 1837095) Visitor Counter : 134