தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிரதமர்களின் அருங்காட்சியகத்திற்கு வலுவூட்டும் பிரசார் பாரதி ஆவணக்காப்பகம்

Posted On: 16 APR 2022 1:26PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளான ஏப்ரல் 14, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரதமர்களின் அருங்காட்சியகம் எனும் சிறந்த தேசிய நோக்கத்திற்கு பிரசார் பாரதியின் ஆவணக்காப்பகம் பங்காற்றுகிறது.

நாட்டின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அரிய உள்ளடக்கத்தின் பொக்கிஷமான பிரசார் பாரதி ஆவணக்காப்பகம் சுமார் 206 மணிநேர ஒலி மற்றும் 53 மணிநேர காட்சி உள்ளடக்கத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.  

அரசியல் நிர்ணய சபை உரை, முதல் சுதந்திர தின நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு விழா, முதலாவது அணு உலை திறப்பு விழா, அவசரநிலை பிரகடனம், ஐ.நா பொதுச் சபையில் உரை, அணிசேரா மாநாடு, தில்லி மெட்ரோ திறப்பு விழா மற்றும் பல இவற்றில் அடங்கும். 1940-களில் இருந்து பிரத்தியேகமாக கிடைக்கும் இந்த விலைமதிப்பற்ற பதிவுகள் பிரசார் பாரதியால் பொது நலனுக்காக பாதுகாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த அறிவு மையமாக இந்த அருங்காட்சியகம் இருக்கும். ஏனெனில், இந்தியாவின் அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை இது வெளிப்படுத்தும். 10,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் அனைத்து இந்தியப் பிரதமர்களின் அரிய புகைப்படங்கள், உரைகள், காணொலிகள், செய்தித்தாள் துணுக்குகள், நேர்காணல்கள் மற்றும் அசல் எழுத்துக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் இன்டராக்டிவ் ஸ்கிரீன்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கவனத்தை கவர்ந்திழுக்கும் விதத்தில் இந்த அருங்காட்சியகம் தகவல்களை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817269 

-----



(Release ID: 1817297) Visitor Counter : 180