இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
நாடுமுழுவதும் 623 மாவட்டங்களில் நேரு யுவகேந்திரா அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை தியாகிகள் தினத்தை கடைபிடித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2022 9:51AM by PIB Chennai
விடுதலைப் பெருவிழாவின் ஒருபகுதியாக 2022 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி அன்று தியாகிகள் தினத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் கடைபிடித்தது. இதில், ஏராளமான இளைஞர் தன்னார்வலர்கள் நேரு யுவகேந்திரா அமைப்பின் உறுப்பினர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்த பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவ தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
623 மாவட்டங்களில் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்த 10,926 கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தியாகிகள் தினத்தை கடைபிடித்தன.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நாட்டின் சிறந்த புதல்வர்களான அந்த இளைஞர்களின் துணிச்சலான தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 23 ஆம் நாள் தியாகிகள் தினமாக இந்தியா கடைபிடிக்கிறது.
விடுதலைப் பெருவிழாவின் ஒருபகுதியாக புரட்சியாளர்களுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் தியாகிகள் தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைமுறை, பணிகள், சிந்தனை ஆகியவற்றை கொண்டாடுவதன் மூலம் இளைய தலைமுறையினர் மரியாதை, பெருமை, மற்றும் கடமை ஆகிய குணநலன்களோடு திகழ முடியும்.
மேலும், தேசபக்தி, தேசியவாதம் ஆகியவற்றை இளைஞர்களிடையே ஏற்படுத்தி நாட்டை கட்டமைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் மேலும் பங்கேற்க வழிவகுக்கும்.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1809202)
வருகையாளர் எண்ணிக்கை : 352