பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
உலகளவில் இந்தியா முக்கிய பங்காற்றவும், விடுதலையின் 75ம் ஆண்டிலிருந்து நூற்றாண்டுக்கு கொண்டு செல்லவும் பட்ஜெட் 2022 வழிவகுக்கிறது: டாக்டர். ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2022 7:27PM by PIB Chennai
உலகளவில் இந்தியா முக்கிய பங்காற்றவும், விடுதலையின் 75ம் ஆண்டிலிருந்து நூற்றாண்டுக்கு கொண்டு செல்லவும் பட்ஜெட் 2022 வழிவகுக்கிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
பட்ஜெட் 2022-23 குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்தது. இதில் பிரபல பொருளாதார நிபுணர்கள், அறிஞர்கள், பிரபல வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டாக்டர். ஜிதேந்திர சிங் பேசியதாவது:
பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த 10 பட்ஜெட்டிலும், உடன் இருக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கூடிய ஒரு அணுகுமுறையில் நிலைத்தன்மை பொதுவான அடிப்படையாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு வெற்றிகரமான பட்ஜெட்டும், இந்தியாவை உலகளாவிய பங்காற்ற கொண்டு சென்றுள்ளது.
சுதந்திரத்துக்குப்பின் வளர்ச்சி அற்ற நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம் 1990ம் ஆண்டுகளில் தான், முன்னேற தொடங்கியது. ஆனால் இதை ஆற்றல் மிக்கதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி மாற்றினார். கொரோனா தொற்றுக்குப்பின், ஒட்டுமொத்த உலகமும், இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது.
நம்மால் வழிநடத்தப்படுவதற்கு தற்போது உலகம் தயாராக உள்ளது. ஆனால் உலகை வழிநடத்த நாம் தயாராக இருக்கிறோமோ என்பது தான் கேள்வி. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் அடிப்படையிலான பொருளாதாரம் மூலம், இந்தியா முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்தப் பட்ஜெட் 2022 வழிவகுக்கிறது. ஆழ்கடல் வளங்கள் உட்பட இந்தியாவின் கண்டுபிடிக்கப்படாத வளங்களை ஆராய்வதன் மூலம் பொருளாதாரம் வளப்படுத்தப்படுகிறது.
அடுத்த தேர்தலுக்கான பட்ஜெட்டை வழங்காமல், அடுத்த தலைமுறைக்கான பட்ஜெட்டை பிரதமர் மோடி அளித்துள்ளார். இதனால் தேர்தல் சலுகை அறிவிப்புகளை எதிர்பார்த்த விமர்சகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
நாட்டின் எதிர்கால பொருளாதாரம், யோசனைகளின் பொருளாதாரமாகவும், கற்பனையான புத்தாக்க பொருளாதாரமாகவும் இருக்கப்போகிறது. பட்ஜெட் 2022, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எதிர்கால தொலைநோக்கை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு டாக்டர். ஜிதேந்திர சிங் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795814
************
(வெளியீட்டு அடையாள எண்: 1795835)
வருகையாளர் எண்ணிக்கை : 294