அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் தொற்றுப் பரவலை குறைக்க ரயில் பெட்டிகள், ஏசி பஸ்கள் மற்றும் அறைகளில் சிஎஸ்ஐஆரின் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

Posted On: 17 JAN 2022 5:32PM by PIB Chennai

கோவிட் தொற்றுப் பரவலைக் குறைக்க ரயில் பெட்டிகள், ஏசி பஸ்கள் மற்றும் அறைகளில், மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) உருவாக்கிய  புறஊதா-சி (யுவி-சி) கதிரியக்கத்  தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் குறைப்பதற்கான தொற்று அழிப்பு தொழில்நுட்பத்தின் சிஎஸ்ஐஆர் வழிகாட்டுதல்களை டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டார்.   இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்றுப் பரவலைக் குறைப்பதில், சிஎஸ்ஐஆர்-சிஎஸ்ஐஓ மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கிய யுவி-சி தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கிறது என தெரிவித்தார். 

ரயில் நிலையங்கள், ஏசி பஸ்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாகவும், தற்போது பொதுமக்கள் உபயோகத்திற்காக இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 

இந்தத் தொற்று ஒழிப்பு தொழில்நுட்பத்தைப் பொருத்தினாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  காற்றில் உள்ள கொரோனா வைரசை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 

வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் காற்றில் பரவும் இதர கிருமிகளை யுவி-சி தொழில்நுட்பம் செயலிழக்கச் செய்கிறது என அவர் தெரிவித்தார்.  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில், உள் அரங்கு கூட்டங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் படி அறிவுறுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிஎஸ்ஐஆர் கடிதம் எழுதவுள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 

ஆடிட்டோரியங்கள். மிகப் பெரிய அரங்குகள், வகுப்பறைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் இந்த யுவி-சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொற்றுக்கு எதிரான பாதுகாப்புச் சூழலை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

பாந்திராவிலிருந்து சண்டிகர் செல்லும் ரயில்பெட்டிகளில் இந்த யுவி-சி தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாக ரயில்வே வாரிய நிர்வாக இயக்குநர் திரு ஏ கே மல்ஹோத்ரா  கூறினார். உத்தரப்பிரதேசத்தில் ஏசி பஸ்களில் இந்த யுவி-சி தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைச் செயலாளர் திரு அமித் வரதன் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790527

••••••••••••••



(Release ID: 1790540) Visitor Counter : 202