நிதி அமைச்சகம்
நாட்டின் ஒட்டுமொத்த சூழல் குறித்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் / யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
Posted On:
06 DEC 2021 5:36PM by PIB Chennai
பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதலீட்டு சூழலை மேம்படுத்தும் நோக்கில், மத்திய நிதித்துறை மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 15.11.2021 அன்று மாநில முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் / யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தகவலை மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மூலதன செலவுகளை அதிகரித்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், முதலீடு சார்ந்த வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சந்தை அணுகுதல், வாழ்க்கைத் தர மேம்பாடு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, மாநிலங்களில் பணமாக்கக் கூடிய சொத்துக்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்தி, புதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சமூக முன்னுரிமை திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். .
சுற்றுச்சூழல் / வனத்துறை ஒப்புதல் பெறுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்தல், ஒரே சீரான கடலோர மண்டல ஒழுங்குமுறை சட்டம், அரசு – தனியார் பங்களிப்பு சூழலை வலுப்படுத்துவதற்கான சச்சரவு தீர்வு நடைமுறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எழுப்பியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வங்கி கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், வடகிழக்கு பிராந்தியத்தில் மாநிலங்கள் சார்ந்த வர்த்தக கொள்கையை உருவாக்குதல் மற்றும் நாடு முழுவதும் வேளாண் சாகுபடி சார்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778543
****
(Release ID: 1778615)
Visitor Counter : 122