பிரதமர் அலுவலகம்

உச்சநீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

Posted On: 26 NOV 2021 9:35PM by PIB Chennai

உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நீதிபதி என் வி ரமணா, மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள், இந்திய தலைமை வழக்கறிஞர் திரு கே கே வேணுகோபால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு விகாஸ் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாடாளுமன்ற சகாக்குள் மற்றும் அதிகாரிகளுடன் காலையில் தாம் இருந்ததாக கூறினார். தற்போது அவர் நீதித்துறையின் கற்றறிந்த உறுப்பினர்களுக்கிடையே இருப்பதாகக் கூறினார். "நம் அனைவருக்கும் வெவ்வேறு பாத்திரங்கள், வெவ்வேறு பொறுப்புகள், வெவ்வேறு வேலை முறைகள் இருக்கலாம், ஆனால் நமது நம்பிக்கை, உத்வேகம் மற்றும் ஆற்றலின் ஆதாரம் ஒன்றுதான் - நமது அரசியலமைப்பு" என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகால இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தைப் போற்றி, சுதந்திரத்திற்காக வாழ்ந்து மறைந்த மக்களின் கனவுகளின் ஒளியில் அரசியலமைப்பை நமக்குத் தந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், குடிமக்களில் பெரும் பகுதியினர் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்றவற்றில் பின்னடைந்து இருந்தார்கள் என்று பிரதமர் கூறினார். அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க உழைப்பதே, அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை. விலக்கி வைக்கப்பட்டவர்களை உள்ளிணைப்பதற்கான மாபெரும் இயக்கம் நாட்டில் நடைபெற்று வருவதாக அவர் திருப்தி தெரிவித்தார்.

கொரோனா கால கட்டத்தில், கடந்த பல மாதங்களாக 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டதாக பிரதமர் கூறினார். பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவு தானியங்களை அரசு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏழைகள், பெண்கள், திருநங்கைகள், தெருவோர வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பிற பிரிவினரின் தேவைகள் மற்றும் கவலைகள் நிவர்த்தி செய்யப்படும் போது, அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படுவார்கள், மேலும் அரசியலமைப்பின் மீது அவர்களின் நம்பிக்கை வலுப்பெறுகிறது.

அனைவருடன், அனைவரின் மேன்மைக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன்என்பது அரசியலமைப்பு உணர்வின் மிக சக்திவாய்ந்த வெளிப்பாடு ஆகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசியலமைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு, வளர்ச்சியில் பாரபட்சம் காட்டாது, நாம் இதை செய்து காட்டியிருக்கிறோம். ஒரு காலத்தில் வளம் மிக்க மக்களுக்கு மட்டுமே கிடைத்த தரமான உள்கட்டமைப்பு வசதிகளை இன்று பரம ஏழைகளும் பெறுகின்றனர். இன்று, தில்லி மற்றும் மும்பை போன்ற மெட்ரோ நகரங்கள் மீது நாடு கவனம் செலுத்துவதைப் போலவே லடாக், அந்தமான் மற்றும் வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை, ஆண்களை விட இப்போது பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார். கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவமனையில் குழந்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகம். இதனால், தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

உலகில் வேறொரு நாட்டின் காலனியாக எந்த நாடும் இன்று இல்லை என்று பிரதமர் கூறினார். ஆனால் காலனித்துவ மனநிலை முடிந்துவிட்டது என்பது இதன் பொருளல்ல. “இந்த எண்ணம் பல சிதைவுகளுக்கு வழிவகுப்பதை நாம் காண்கிறோம். இதற்கு மிகத் தெளிவான உதாரணம், வளரும் நாடுகளின் வளர்ச்சிப் பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் தடைகள். வளர்ந்த நாடுகள் இன்றைய நிலையை அடைந்துள்ள அதே வழியை, அதே பாதையை வளரும் நாடுகளுக்கு மூட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் அவர். பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை முன்கூட்டியே அடையும் செயல்பாட்டில் உள்ள ஒரே நாடு இந்தியா என்று பிரதமர் குறிப்பிட்டார். இருந்த போதிலும், சுற்றுச்சூழலின் பெயரால், இந்தியா மீது பல்வேறு அழுத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் காலனித்துவ மனநிலையின் விளைவு. “துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற மனநிலையால், சில சமயம் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும், சில சமயங்களில் வேறு ஏதாவது ஒன்றின் துணையாலும் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடைகள் ஏற்படுகின்றன,” என்று அவர் கூறினார். சுதந்திர இயக்கத்தில் உருவான உறுதியை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தக் காலனித்துவ மனப்பான்மை பெரும் தடையாக உள்ளது என்றும் அவர் கூறினார். "நாம் இதை அகற்ற வேண்டும். இதற்கு, நமது மிகப்பெரிய பலம், நமது மிகப்பெரிய உத்வேகம், நமது அரசியலமைப்பு ஆகும்" என்று அவர் கூறினார்.

அரசு மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டும் அரசியலமைப்பின் கருவறையில் இருந்து பிறந்தவை என பிரதமர் குறிப்பிட்டார். எனவே, இருவரும் இரட்டையர்கள். இவை இரண்டும் அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே, ஒரு பரந்த கண்ணோட்டத்தில் இரண்டும் வேறுபட்டிருந்தாலும் கூட ஒன்றுக்கொன்று வலுவூட்டுகின்றன. அதிகாரப் பிரிவினை குறித்த கருத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், அமிர்த காலத்தில், சாமானியர் தற்போதுள்ளதை விட அதிகமாக தகுதியுடையவர் என்பதால், அரசியலமைப்பின் வரையறைக்குள் செயல்பட்டு கூட்டு உறுதியைக் காட்ட வேண்டிய தேவை இருப்பதாக அவர் கூறினார். "அதிகாரப் பிரிவினையின் வலுவான அடித்தளத்தில், நாம் கூட்டுப் பொறுப்பின் பாதையை வகுத்து, ஒரு திட்டத்தை உருவாக்கி, இலக்குகளை நிர்ணயித்து, நாட்டை அதன் இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

****



(Release ID: 1775461)



(Release ID: 1776775) Visitor Counter : 205