தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, ஊடகவியலாளர்களுக்கு மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 16 NOV 2021 3:39PM by PIB Chennai

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, இந்திய ஊடகவியலாளர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். “தொலைக்காட்சி செய்திகள், வானொலி, சமூக ஊடகம் அல்லது ஆன்லைன் டிஜிட்டல் ஊடகம் என எதுவாக இருந்தாலும், மக்கள் புரிந்து கொள்ளும் மொழி மற்றும் அவர்கள் அணுகும் தளங்கள் மூலம் பொதுமக்கள் நலன் சார்ந்த தகவல்கள் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது” என அமைச்சர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

“தேசிய பத்திரிகையாளர் தினம் இந்திய மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதில், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் பங்கை பிரதிபலிக்கும் நாளாகும்.   இந்தியா போன்ற  துடிப்பான ஜனநாயகத்தில் ஊடகங்கள்  கண்காணிப்பை மேற்கொள்வதன் மூலம் முக்கிய பங்காற்றுகின்றன” என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

போலிச் செய்திகளுக்கு எதிராக கூட்டாக போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள திரு தாகூர், “இந்த நாளில் எனது ஊடக நண்பர்கள், போலிச் செய்திகள் மற்றும் போலியான புனைவுகள்  என்னும் அச்சுறுத்தலை முறியடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன்.  மத்திய அரசு அதன் பங்குக்கு பிஐபி-யில் உண்மை கண்டறியும் பிரிவை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இது தற்போது நன்மதிப்பை பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

புதிய ஆர்வம் கொண்ட இந்தியாவை கட்டமைக்க ஊடகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர், “இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நாம் கொண்டாடும் நிலையில், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளை நனவாக்கும் வகையில்,  அடுத்த 25 ஆண்டுகளை  நோக்கி நாம் அனைவரும் கூட்டாக இணைந்து பாடுபடுவோம்”  என்று தமது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

*********

(Release ID: 1772302)



(Release ID: 1772321) Visitor Counter : 221