குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு, வேளாண் அடிப்படையிலான தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 07 NOV 2021 2:01PM by PIB Chennai

ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு, வேளாண் அடிப்படையிலான தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என  குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

 

பீகார் மாநிலம் புசா நகரில்  உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும் நமது விவசாயிகள், உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது பாராட்டத்தக்கது. கடினமாக உழைத்த விவசாயிகளுக்கும், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் நாடு அதிகம் கடமைப்பட்டுள்ளது. வேளாண்மை நமது அடிப்படை கலாச்சாரம். இதற்கு நமது மத்திய, மாநில அரசுகள், தலைவர்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கழகங்கள் மற்றும் ஊடகம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிலையான வேளாண் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வேளாண்துறைக்கு வழங்கப்பட வேண்டும்.

 

உலகின் அறிவு மையமாகத் திகழும் பீகாரில் உள்ள நாளந்தா போன்ற கல்வி நிறுவனங்கள் பழம் பெருமையை மீட்க வேண்டும் மற்றும் அறிவு, புதுமை கண்டுபிடிப்பின் மையமாக மீண்டும் ஆக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகங்கள் வழிநடத்த உதவ வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். விவசாய படிப்பில் பட்டம் வென்ற மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சாதிக்கப் பாடுபட வேண்டும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769845

***



(Release ID: 1769865) Visitor Counter : 202