எஃகுத்துறை அமைச்சகம்

இந்தியா, ரஷ்யா கூட்டமைப்புக்கு இடையே எஃகு தயாரிப்பு நிலக்கரி துறையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 14 OCT 2021 5:46PM by PIB Chennai

ரஷ்ய கூட்டமைப்பின் எரி சக்தி வார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய எஃகு துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு ரஷ்ய கூட்டமைப்பின் எரி சக்தி துறை அமைச்சர் திரு நிகோலாய் சுல்கிநோவை அவர் சந்தித்து பேசினார். அப்போது எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கோகிங் நிலக்கரி, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு திட்டங்கள், எஃகு தயாரிப்பு நிலக்கரியில் வர்த்தக செயல்பாடுகள், இந்தியாவிற்கு நல்ல தரமான கோகிங் நிலக்கரியை நீண்ட காலத்திற்கு விநியோகம் செய்வது, கோகிங்க் நிலக்கரியின் சேமிப்பு வசதிகள்,   போக்குவரத்து தளவாட மேம்பாடு, நிலக்கரி உற்பத்தி மேலாண்மையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல், சுரங்க தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அமைச்சர்களும் எஃகு துறையில் நிலக்கரி உற்பத்தியில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தனர்.

தமது மாஸ்கோ பயணத்தின்போது மத்திய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் ரஷ்யாவின் முன்னணி எஃகு கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.

******



(Release ID: 1764042) Visitor Counter : 228


Read this release in: English , Urdu , Hindi , Telugu