குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்க குடியரசு துணைத் தலைவர் கோரிக்கை

Posted On: 09 SEP 2021 12:33PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்களின் செயல்திறனைப் பாராட்டியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, 2024-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தனியார் துறையினர் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களும் நமது இளம் மற்றும் எழுச்சியூட்டும் தடகள வீரர்களுக்கு தேவையான ஆதரவு அமைப்புமுறையை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சென்னை ராஜ்பவனில் இருந்து எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சிராப்பள்ளி வளாகத்தைக் காணொலிக் வாயிலாக இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் அபாரமான செயல்திறன் நாட்டு மக்கள் அனைவரையும் பெருமையில் ஆழ்த்தியதாக கூறினார்.

19 பதக்கங்களைப் வென்று சாதனை புரிந்த நமது பாராலிம்பிக் வீரர்களின் விடாமுயற்சியையும் நெகிழ்தன்மையையும் பாராட்டிய அவர், அவர்களது தலைசிறந்த செயல்திறன், மாற்றுத்திறன் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மட்டும் மாற்றவில்லை, விளையாட்டுத்துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக வளரும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான அவனி லேக்கராக்களும் நீரஜ் சோப்ராக்களும், வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரு சிறப்பு சூழல் உருவாக்கப்பட்டால் அவர்களது திறமையை வெற்றிகரமாக வளர்க்க முடியும்”, என்று அவர் தெரிவித்ததுடன், இதனை முன்னெடுத்துச் செல்லுமாறு கல்வி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.

கபடி, கொக்கோ போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை மிகப்பெரிய அளவில் ஊக்கப்படுத்தி அவற்றை மீட்குமாறும் பல்கலைக்கழகங்களுக்கு அவர் யோசனை தெரிவித்தார்.

புதிய ஆற்றல் வாய்ந்த மற்றும் எழுச்சியூட்டும் இந்தியாவை உருவாக்குவதில் தரமான கல்வியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய குடியரசு துணைத் தலைவர், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இது சம்பந்தமாக, வலுவான கல்வி- தொழில்துறை இடையேயான இணைப்பை கட்டமைத்து, தொழில்துறைக்குத் தேவையான திறன்களில் கவனம் செலுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

வேகமாக மாறிவரும் உலகில் உளவியல் மற்றும் சமூக திறன்களின் அவசியத்தை எடுத்துரைத்த திரு நாயுடு, வாழ்க்கையை நோக்கிய நேர்மறை பார்வையை மாணவர்கள் வகுத்துக் கொள்ளுமாறும், தேசிய கட்டமைப்பில் பங்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். உங்கள் கல்வியை பிறரது நலனுக்காகவும், சமுதாயம் மற்றும் நாட்டின் நன்மைக்காகவும் பயன்படுத்த, தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்”, என்றார் அவர்.

தக்ஷஷீலா மற்றும் நாளந்தா போன்ற கல்வி நிறுவனங்களுடன் இந்தியாவின் வளமான மற்றும் புகழ்பெற்ற வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், இந்த கடந்த கால கீர்த்தியை மீண்டும் பெற்று இந்தியாவை விஷ்வகுருவாக மீண்டும் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வித்துறையில் அதிகாரமளிக்கப்பட்ட இந்தியாவின் கனவை நனவாக்குவதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் தனியார் துறையினரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது”, என்றும் அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை குறைக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சாமானிய மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்றும், வாழ்க்கையின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொவிட்-19 மருத்துவ சோதனைகளிலும், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைக்  குறைந்த செலவில் வழங்கவும் அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வரும் எஸ்ஆர்எம் குழுமத்திற்கு திரு வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார். குழுமத்தின் நிறுவனர் டாக்டர் டி ஆர் பாரிவேந்தரின் தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டிய அவர், தரமான கல்வியை நோக்கிய எஸ்ஆர்எம் குழுமத்தின் கவனம், தற்சார்பு இந்தியாவுக்கான அடித்தளம் அமைக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்து இருப்பதாகக் கூறினார்.

நோபல் பரிசு வென்ற டாக்டர் சி வி ராமன், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், டாக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் மற்றும் தேசிய தலைவர்கள் திருச்சிராப்பள்ளியில் கல்வி பயின்றதை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எஸ்ஆர்எம் வளாகம் அந்நகரத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேசிய தேவைகள் மற்றும் உள்நாட்டு தொடர்பை கருத்தில்கொண்டு திறன் மேம்பாட்டு துறைக்கு முன்னுரிமை அளிக்குமாறு அந்த நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

கல்வித்துறையில் உள்ள ஊரக- நகர பாகுபாட்டை நீக்குவது குறித்துப் பேசிய அவர், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் மற்றும் கற்கும் அமைப்பு முறையில் சமூக ஆதரவின் அவசியத்தைக் சுட்டிக் காட்டினார். சுதந்திரம் மற்றும் படைப்பாற்றலை வலியுறுத்தும் புதுமையான நடைமுறைகளை ஊக்கப்படுத்துமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களிடையே தன்னார்வ தன்மை மற்றும் சமூக சேவை உணர்வை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம்”, என்று அவர் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித், எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவனர், வேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி ஆர் பாரிவேந்தர், கழகத்தின் தலைவர் திரு நிரஞ்சன்எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவகுமார் மற்றும் பலர் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753455

***************** 



(Release ID: 1753480) Visitor Counter : 211