இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைத்தார் பாவனா படேல்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார்
Posted On:
29 AUG 2021 5:54PM by PIB Chennai
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதல் வெள்ளி பதக்கத்தை வென்று பாவனா படேல் வரலாறு படைத்தார். தேசிய விளையாட்டு தினத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றது ஆச்சரியமான மற்றும் மறக்க முடியாத பரிசு.
பாவனா மற்றும் அவரது தோழி சோனல்பென் படேல் ஆகியோரை கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியபோது எடுத்த புகைப்படத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் பகிர்ந்து கொண்டார். ‘‘சோனல் மற்றும் பாவனா ஆகியோர் 2010ம் ஆண்டில் நடந்த தில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றனர். அவர்களை முதல்வர் நரேந்திர மோடி சந்தித்து ஊக்குவித்தார்’’ என சுட்டுரையில் அமைச்சர் திரு அனுராக் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
‘‘விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவது, ஒவ்வொரு விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பது வாழ்நாள் முயற்சி, அது தொடர்கிறது, இன்று பலன் அளித்துள்ளது’’ என அந்த சுட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ யிங்குக்கு எதிரான இறுதி போட்டிக்குப்பின் பின் ஞாயிறு காலை பாவனாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் வெள்ளிப் பதக்கம் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
34 வயதான இந்திய பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாவனா படேல், 4வது பிரிவில் உலகளவில் 12வது இடத்தில் உள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் இறுதி போட்டியில் ஜோ யிங்குடன் கடுமையான போட்டியை அவர் சந்தித்தார். உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் அவர் 0-3 என்ற அளவில் தோல்வியடைந்தார். சீனாவின் ஜோ யிங், நான்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் 6 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750200
*****************
(Release ID: 1750245)