விண்வெளித்துறை

விண்வெளி நடவடிக்கை மசோதா பற்றி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 29 JUL 2021 12:19PM by PIB Chennai

விண்வெளித் துறையில் தனியார் துறையினரின் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அனைத்து ஒழுங்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய விண்வெளி நடவடிக்கை மசோதா குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில், விண்வெளி தொழில்நுட்பங்கள், சேவைகள் மற்றும் உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான சூழலியலை உருவாக்க அரசு தீவிரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம், விண்வெளித் துறை சீர்திருத்தங்களை அறிவித்தது. தனியாரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விண்வெளித் துறையின் கீழ் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் என்ற தனி முதன்மை முகமை உருவாக்கப்பட்டது. தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும் போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் நிறுவப்பட்ட இயந்திரங்களின் பாதுகாப்பை இந்த முகமை உறுதி செய்யும்.

பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுடனும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தனியாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக விண்வெளித்துறையின் வசதிகளை தனியார் துறையினர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசு ஏராளமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740219

*****



(Release ID: 1740319) Visitor Counter : 217