குடியரசுத் தலைவர் செயலகம்

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 27 JUL 2021 1:30PM by PIB Chennai

காஷ்மீர் இளம் தலைமுறையினர் தங்களின்  வளமான மரபிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வலியறுத்தினார்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில்இன்று நேரடியாக பங்கேற்ற குடியரத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:  

காஷ்மீர் இளம் தலைமுறையினர் தங்களின்  வளமான மரபிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.  காஷ்மீர் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு நம்பிக்கை ஒளியாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். காஷ்மீரின் ஆன்மீக மற்றும் கலாச்சார செல்வாக்கு,  நாடு முழுவதும் தடம் பதித்துள்ளது. 

விளக்கமுடியாத அளவுக்கு மிகச் சிறப்பு பெற்ற  இடம் காஷ்மீர். இதன் அழகை விவரிக்க பல கவிஞர்கள் முயன்றுள்ளனர். இதை பூமியின் சொர்க்கம் என அவர்கள் அழைத்தனர். காஷ்மீர் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இங்குள்ள இயற்கை அழகுதான், காஷ்மீரை கருத்துக்களின் மையமாக ஆக்கியுள்ளது. பனி படர்ந்த மலைகளால், இந்த பள்ளத்தாக்கு சூழப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இது முனிவர்களுக்கும், சாதுக்களுக்கும் மிகச் சிறந்த இடம்.  காஷ்மீரின் பங்களிப்பை குறிப்பிடாமல், இந்திய தத்துவத்தின் வரலாற்றை எழுத முடியாது.  மிக பழமையான ரிக்வேதம் கூட, காஷ்மீரில் எழுதப்பட்டதுதான்.  இந்திய தத்துவங்கள் செழித்து வளர, மிக உகந்த பகுதியாக காஷ்மீர் உள்ளது.  இங்கேதான் மிகச் சிறந்த தத்துவ ஞானி அபினவ்குப்தா  அழகியல் மற்றும் கடவுளை உணர்ந்து கொள்வதற்கான முறைகளை எழுதினார். இந்துமதமும், புத்த மதமும், காஷ்மீரில்தான் செழித்து வளர்ந்தன. அதற்கு பிந்தைய நூற்றாண்டுகளில் இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்கள் செழித்து வளர்ந்தன. 

பல கலாச்சாரங்களின் சங்கமமாக காஷ்மீர் உள்ளது. இடைப்பட்ட காலத்தில், பல்வேறு ஆன்மீக மரபுகளை ஒன்றிணைப்பதற்கான வழியைக் லால் டெட்  காட்டினார்.

காஷ்மீரில் அமைதியான வாழ்வின் பாரம்பரியம் தகர்க்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டம். காஷ்மீரில் முன்பு வன்முறை ஒருபோதும் இருந்ததில்லை. தற்போது இது அன்றாட நிகழ்வாகிவிட்டது. காஷ்மீர் கலாச்சாரத்தில் வன்முறை இருந்ததில்லை. தற்போதுள்ள வன்முறை, உடலில் ஏற்படும் வைரஸ் பாதிப்பு போல், தற்காலிகம் என குறிப்பிடலாம். இது அகற்றப்பட வேண்டும். தற்போது புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் இழந்த பெருமையை மீட்க உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அனைத்து வேறுபாடுகளையும் சரிசெய்து, மக்களின் சிறந்த ஆற்றலை, வெளிப்படுத்தும் திறன் ஜனநாயகத்துக்கு உள்ளது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த தொலைநோக்கை, காஷ்மீர் ஏற்கனவே உணர்ந்துள்ளது. தங்களின் எதிர்காலம், அமைதியை காஷ்மீர் மக்களே உருவாக்கட்டும். இதில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக பங்கு உண்டு. காஷ்மீரை மீண்டும் உருவாக்கும் இந்த வாய்ப்பை அவர்கள் தவறவிடமாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் தற்போது பட்டம் பெற்றுள்ளவர்களில் சுமார் பாதிப் பேரும், தங்கப் பதக்கம் பெற்றவர்களில் 70 சதவீதம் பேரும் பெண்களாக உள்ளனர். இது திருப்தி மட்டும் அல்ல. நமது புதல்விகள், நமது புதல்வர்களை போல் சில நேரங்களில் அவர்களைவிட சிறப்பாக செயல்படவும் தயாராக இருப்பது நமக்கு பெருமையான விஷயம்.  சமத்துவத்தில் உள்ள இந்த நம்பிக்கை மற்றும் திறன்கள், பெண்கள் இடையே வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் புதிய இந்தியாவை நம்மால் வெற்றிகரமாக உருவாக்க முடியும். இந்த புதிய இந்தியாதான் நாடுகளின் நட்பில் முன்னணியில் உள்ளது. இந்த உயர்ந்த கொள்கைக்கு, நமது மனித வளங்களையும், உள்கட்டமைப்புகளை உருவாக்குவதுதான் படிக்கற்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த ஆற்றிய உரைக்கு கீழ்க்கண்ட இணைப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739414

-----



(Release ID: 1739480) Visitor Counter : 225