ஜல்சக்தி அமைச்சகம்

கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மேலாண்மை வாரியங்களின் அதிகார வரம்புக்கான இரண்டு அரசிதழ் அறிவிப்புகளை அரசு வெளியிட்டது

Posted On: 16 JUL 2021 4:53PM by PIB Chennai

கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகள் மேலாண்மை வாரியங்களின் அதிகார வரம்புக்கான அரசிதழ் அறிவிப்புகளை 2021 ஜூலை 15 தேதியிட்டு ஜல்சக்தி அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இரண்டு மாநிலங்களில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை சார்ந்து பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களின் ஒழுங்குமுறை, செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான அதிகாரம் கோதாவரி நதி மேலாண்மை வாரியம் மற்றும் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்துக்கு கிடைக்கும். நீர்வளங்களை இரு மாநிலங்களில் சிறப்பாக பயன்படுத்த இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த இரு வாரியங்களுக்கான அதிகார வரம்பு குறித்த அறிவிப்பு 2020 அக்டோபரில் நடைபெற்ற தலைமை குழுவின் இரண்டாவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோதாவரி நதி மேலாண்மை வாரியம் மற்றும் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியம் ஆகியவற்றுக்கான அதிகார வரம்பு இந்திய அரசால் நிர்ணயிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கோதாவரி நதி மேம்பாட்டு வாரியம் மற்றும் கிருஷ்ணா நதி மேம்பாட்டு வாரியத்திற்கு தலா ஒன்று என இரண்டு அரசிதழ் அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆற்று படுகைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் பராமரிப்புக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களின் மக்கள் சம அளவில் பலன்களை பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த இரண்டு வாரியங்களின் சுமுகமான செயல்பாட்டுக்கு இரு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736182

*******



(Release ID: 1736273) Visitor Counter : 205