சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது : டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 02 JUL 2021 2:14PM by PIB Chennai

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபிக்கான 17வது உலகளாவிய கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய அமைப்பு (ஐஎஸ்சிசிபி) ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நேற்று கலந்து கொண்டு பிரபல மருத்துவர்கள் மத்தியில் பேசியதாவது:

ஆசியாவில் முதல் முறையாக கர்ப்பப்பை வாய் நோயியல் குறித்த உலகளாவிய கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கும், கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் பயிற்சியில் முன்னணியில் இருப்பதற்கும் ஐஎஸ்சிசிபி அமைப்புக்கு வாழ்த்துகள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 2030ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கேற்ப இந்த கூட்டத்தின் கருப் பொருள் ‘‘கர்ப்பப்பை வாய் புற்றுநோயை நீக்குதல்: நடவடிக்கைக்கு அழைப்பு’’ என அமைந்துள்ளது.  இது பெண்கள் இடையே காணப்படும் 4வது பொதுவான புற்றுநோயாக உள்ளது. இது உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண்களை பாதிக்கிறது மற்றும் இரண்டரை லட்சம் பெண்களின் உயிரைப் பறிக்கிறது.

உலகளவில் 2 நிமிடங்களுக்கு ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறக்கிறார் என்பது மிகவும் சோகமானது. இது பெண்களின் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணபடுத்தக்கூடிய நோய். அப்படியிருந்தும் இந்த நோய் தாக்குதலால் பெண்கள் கஷ்டப்படுவதுதான் வருத்தமாக உள்ளது. இந்த நோய் முற்றிய நிலையில் கண்டறிப்பட்டாலும், தகுந்த சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும். தடுப்பு நடவடிக்கை, பரிசோதனை, சிகிச்சை போன்ற விரிவான அணுகுமுறை மூலம், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒரு தலைமுறைக்குள் ஒழிக்க முடியும்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை உருவாக்கியுள்ள வளரும் நாடுகள் சிலவற்றில் இந்தியாவும் ஒன்று என என்னால் பெருமிதத்துடன் கூற முடியும். கடந்த 2016-ல் ஆசியாவில் முன்னணி நாடாக, கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றின் பரிசோதனைக்கான செயல்பாடு வழிகாட்டுதல்களை நாங்கள் தொடங்கினோம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732220

*****************



(Release ID: 1732326) Visitor Counter : 256