விவசாயத்துறை அமைச்சகம்

தோட்டக்கலை குழு மேம்பாட்டு திட்டத்தை மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்

Posted On: 31 MAY 2021 5:33PM by PIB Chennai

தோட்டக்கலை துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, தோட்டக்கலை குழு மேம்பாட்டு திட்டத்தை காணொலி மூலம் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 53 குழுக்களில் 12 தோட்டக்கலை குழுக்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் செயல்படுத்தப்படும் மத்திய பிரிவு திட்டமான தோட்டக்கலை குழு மேம்பாட்டு திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டக்கலை குழுக்களை சர்வதேச போட்டித்திறன் மிக்கதாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு தோமர், உற்பத்திக்கு முந்தைய, விளைச்சலின் போது, அறுவடைக்கு பிந்தைய, போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக குறியீடு போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் மீது இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது அரசின் மிகப்பெரிய முன்னுரிமைகளில் ஒன்று எனக் கூறிய அமைச்சர், தோட்டக்கலை குழு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 10 லட்சம் விவசாயிகள் மற்றும் தொடர்புடையவர்கள் பயனடைவார்கள் என்றும், 53 குழுக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது ரூ 10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, இத்தகைய குழுக்களை நாடு முழுவதும் உருவாக்குவதன் மூலம், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் வாயிலாக சிறிய அளவு நிலங்களை சொந்தமாகக் கொண்டுள்ள விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

-------



(Release ID: 1723240) Visitor Counter : 331