பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சகம், ராணுவப் படைகள், டிஆர்டிஓ மற்றும் இதர ராணுவ அமைப்புகள் கொவிட் இரண்டாம் அலைக்கு எதிரான போரில் எடுத்துவரும் முயற்சிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 17 MAY 2021 5:36PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகள், டிஆர்டிஓ மற்றும் இதர ராணுவ அமைப்புகள் கொவிட் இரண்டாம் அலைக்கு எதிரான போரில் உள்ளூர் நிர்வாகங்களுக்கு ஆதரவளித்து  எடுத்துவரும் முயற்சிகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் 2021 மே 17 அன்று ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய்குமார், கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பிர் சிங், விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா, ராணுவப் படைத் தலைவர் ஜெனரல் எம்எம் நரவனே, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு உற்பத்தி கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, பாதுகாப்பு படைகள் மருத்துவ சேவைகளின் துணைத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட இதர உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

தில்லி, லக்னோ, வாரணாசி, அகமதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் நோயாளிகளுக்கு தேவையான சேவைகளை அவை வழங்கி வருவதாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இது போன்ற வசதிகள் மேலும் சில இடங்களில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உதவுவதில் முப்படைகளுக்கு இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு நிலவி வருவதாகவும், போக்குவரத்து மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறினார்.

கொவிட் நோயாளிகளுக்காக டிஆர்டிஓ உருவாக்கியுள்ள மருந்து குறித்து திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். பாதுகாப்பு துறை மற்றும் அமைப்புகளின்

கொவிட் பணிகள் குறித்து அமைச்சர் மேற்கொள்ளும் நான்காவது ஆய்வுக் கூட்டம் இதுவாகும்.

*****************



(Release ID: 1719439) Visitor Counter : 176