பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களை தணிக்கை செய்ய டாக்டர் ஜித்தேந்திர சிங் உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2021 5:55PM by PIB Chennai

ஜம்மு அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களை தணிக்கை செய்ய வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் உத்தரவிட்டுள்ளார்.

கொவிட் மேலாண்மை நடவடிக்கையில் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி பற்றி சில எதிர்மறையான தகவல்கள் வெளியானதை அடுத்து ஜம்மு நிர்வாகத்தின் உயர் நிலை கூட்டத்தை வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூட்டினார்.

தேவைப்படும் கொவிட் நோயாளிகளுக்கு  மருத்துவ சாதனங்கள்

விநியோகம் சமஅளவில் கிடைப்பதற்காக, ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை தணிக்கை செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஒருவர் இறந்தால் கூட, அது சமூக அமைதியின்மையை ஏற்படுத்திவிடும் என்றும், அனைத்து நல்ல பணிகளையும் மதிப்பற்றதாக்கிவிடும் என்றும் அவர் கூறினார். ஆக்ஸிஜன் கிடைக்காமல், ஒரு மரணம் கூட ஏற்படக் கூடாது என்பதை ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி போன்ற முன்னணி நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் எனவும், மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு பட்நகரின் ஆலோசகர், ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சசி சூடன் சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வென்டிலேட்டர் நிலவரம் குறித்தும் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆய்வு செய்தார். இங்கு 60 வென்டிலேட்டர்கள், மற்றும் சுவாசக்கருவிகள் வழங்கப்பட்டதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள், துணை மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவர்களை ஈடுபடுத்தும்படி டாக்டர் ஜித்தேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

ஜம்முவில் மட்டும்,  45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதம் பேருக்கும்ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீதம் பேருக்கும்  கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டதாக, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைப்பெறுவதாக டாக்டர் ஜித்தேந்திர சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718036

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1718139) வருகையாளர் எண்ணிக்கை : 249
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu