அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர் – சிஎம்இஆர்ஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள், மூன்று எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உரிமை மாற்றம்

Posted On: 06 MAY 2021 10:07AM by PIB Chennai

அறிவியல் தொழில் ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்) - மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (சிஎம்இஆர்ஐ), தனது பிராணவாயு செறிவூட்டி தொழில்நுட்பம் மற்றும் அதிகளவில் இரும்பை நீக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றை 05.05.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக உரிமை மாற்றம் செய்தது.

செறிவூட்டி தொழில்நுட்பம், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள சி அண்டு ஐ கலிப்ரேஷன் நிறுவனத்திற்கும், குர்கானின் மனேசரில் உள்ள எஸ் ஏ கார்ப் நிறுவனத்திற்கும் உரிமை அளிக்கப்பட்டது. அதிகளவில் இரும்பை நீக்கும் தொழில்நுட்பம், குவகாத்தியின் மா துர்கா விற்பனை முகமைக்கு உரிமை மாற்றி அளிக்கப்பட்டது.‌

பெருவாரியான மக்களிடையே இந்தத் தயாரிப்புகளை எடுத்துச் செல்லும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிஎஸ்ஐஆர் - சிஎம்இஆர்ஐ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிரானி தெரிவித்தார்.

அசாமின் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் அதிகளவு இரும்பு கலக்கப்படுவதால், அதிக பாதிப்புகள் ஏற்படும் காம்ரூப் மெட்ரோகாம்ரூப் நகரப் பகுதி, பார்பேட்டா, சிவசாகர் ஆகிய நான்கு முக்கிய மாவட்டங்களில் இதற்கான தீர்வை ஏற்படுத்த தமது நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக மா துர்கா விற்பனை முகமையின் திரு ஓம்கார் பன்சல் கூறினார்.

பிராணவாயு செறிவூட்டல் தொழில்நுட்பத்தை வழங்கி, அதை மேம்படுத்த ஊக்குவித்ததற்காக பேராசிரியர் ஹிராணிக்கு, சி அண்டு ஐ கலிப்ரேஷன் நிறுவனத்தின் திரு அசோக் பத்னி நன்றி தெரிவித்தார்.

செறிவூட்டல் மாதிரியை மேம்படுத்தும் பணியில் தமது நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும், மாதத்திற்கு 5000 செறிவூட்டல்களை  உருவாக்கவும், மிக விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் எஸ் ஏ கார்ப்‌ நிறுவனத்தின் திரு தீபக் ஜெயின் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716408



(Release ID: 1716442) Visitor Counter : 186