குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் திரு. சோலி சொராப்ஜி மறைவிற்கு குடியரசுத் துணை தலைவர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 APR 2021 6:00PM by PIB Chennai

கொவிட் காரணமாக இன்று காலை உயிரிழந்த முன்னாள் தலைமை வழக்கறிஞர் திரு. சோலி சொராப்ஜிக்கு குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு புகழஞ்சலி செலுத்தினார்.

சட்டத்துறையின் தலைசிறந்த வல்லுநர் என்று திரு சொராப்ஜியை வர்ணித்த குடியரசுத் துணை தலைவர், சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் அவர் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கினார் என்றார். மனித உரிமைப் போராளியாக திகழ்ந்த அவர், அவரது பணியின் மூலம் இந்தியாவுக்கு சர்வதேச புகழை தேடித் தந்தார்.

உண்மை மற்றும் நேர்மையின் அடையாளமாக விளங்கிய முன்னாள் தலைமை வழக்கறிஞரை தாம் எப்போதுமே மிகவும் மதித்ததாக திரு நாயுடு கூறினார். திரு சொராப்ஜியும் தம்மிடம் மிகவும் அன்பு செலுத்தியதாக கூறிய குடியரசுத் துணை தலைவர், அவரது மறைவின் மூலம் தலைசிறந்த சட்ட வல்லுனரை நாடு இழந்திருப்பதாகவும் அவரது மறைவு நீதித்துறையில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

திரு சொராப்ஜியின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய குடியரசுத் துணை தலைவர், தமது ஆழ்ந்த இரங்கல்கள் அவர்களிடம் தெரிவித்தார்.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1715181) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi