குடியரசுத் தலைவர் செயலகம்
21ம் நூற்றாண்டில் உலகளாவிய அறிவில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதுதான் தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்: குடியரசுத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2021 7:00PM by PIB Chennai
21ம் நூற்றாண்டில் உலகளாவிய அறிவில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதுதான், தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்றும், இந்த இலக்கை அடைய ரூர்கேலா என்ஐடி போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.
ஒடிசாவில் உள்ள ரூர்கேலா என்ஐடியின் 18வது பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:
கிழக்கு இந்தியாவில் அரசு நடத்தும் 2வது பெரிய தொழில்நுட்ப கழகம் ரூர்கேலா என்ஐடி. இது, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல், இந்த நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களை மேம்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப கல்வியில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நாடு முழுவதும் பல பட்டமளிப்பு விழாக்களில் நான் பங்கேற்றுள்ளேன். கலை, மானுடவியல், மருத்துவ அறிவியல், மற்றும் இதர துறைகளில் மாணவர்களை, மாணவிகள் மிஞ்சுகின்றனர்.
இதேபோல் தொழில்நுட்ப கல்வியிலும், மாணவிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப துறையில் பெண்கள் சிறந்து விளங்குவது, நாட்டின் வளர்ச்சியில் புதிய கோணத்தை ஏற்படுத்தும்.
சமூக பொறுப்பு நடவடிக்கைகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவதுபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் ஈடுபட வேண்டும். தங்களை சுற்றியுள்ள சமூகத்தின் மேம்பாட்டுக்கான பங்களிப்பை அளிக்க வேண்டும்.
21ம் நூற்றாண்டில், உலகளாவிய அறிவில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவது, தேசிய கல்வி கொள்கையின் நோக்கங்களில் ஒன்று.
இந்த தேசிய இலக்குளை அடைவதில், ரூர்கேலா என்ஐடி போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706453
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1706479)
வருகையாளர் எண்ணிக்கை : 174