பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ தின அணிவகுப்பில் ஆளில்லாத குட்டி விமானங்களின் வலிமையை இந்திய ராணுவம் வெளிப்படுத்தியது

Posted On: 15 JAN 2021 4:10PM by PIB Chennai

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 75 ஆளில்லாத குட்டி விமானங்களின் வலிமையை 2021 ஜனவரி 15 அன்று தில்லி கண்டோன்மெண்ட்டில் நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பில் இந்திய ராணுவம் வெளிப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு திறனால் உந்தப்பட்ட தாக்குதல் செயல்பாடுகள் மற்றும் இதர ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வரும் இந்திய ராணுவம், எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் படையினரை மட்டுமே சார்ந்திராமல் தொழில்நுட்பத்தையும் சிறப்பாக பயன்படுத்தும் அமைப்பு என்பதை அங்கீகரிக்கும் வகையில் இன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது.

செயற்கை நுண்ணறிவு, தானியங்கி ஆயுத அமைப்புகள், குவாண்டம் தொழில்நுட்பங்கள், ரோபாடிக்ஸ், மேக கணினியியல், கணிதம் சார்ந்த போர்முறை ஆகியவற்றில் அதிகமாக இந்திய ராணுவம் முதலீடு செய்து வருகிறது.

சிந்தனையாளர்கள், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் கல்வி துறையினர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, மற்றும் ராணுவ பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு பல்வேறு தொழில்நுட்ப முன்னெடுப்புகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இவற்றில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு ஆளில்லாத குட்டி விமான தாக்குதல் நடவடிக்கைகள் இந்திய ஸ்டார்ட் அப் ஒன்றின் பங்களிப்போடு செய்யப்பட்டுள்ளன. ஆயுத தளங்களில் இந்திய ராணுவத்தின் தற்சார்புக்கான தொடக்கத்தை இத்திட்டம் அடையாளப்படுத்துவதோடு, சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அதன் மனித வளத்தோடு இணைப்பதற்கான ராணுவத்தின் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688807

-----



(Release ID: 1688842) Visitor Counter : 224