பாதுகாப்பு அமைச்சகம்

குடியரசு தினவிழா அணிவகுப்பில் என்சிசி மாணவர்கள் பங்கேற்பு

Posted On: 08 JAN 2021 6:03PM by PIB Chennai

தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில், தேசிய மாணவர் படையின்(என்சிசி)  2 பிரிவுகள் பங்கேற்கும் என என்சிசி  தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் ஆயிச் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் பொறுப்புள்ள குடிமகன்களாக்க என்சிசி உறுதி பூண்டுள்ளது.  ஜனவரி 26ம் தேதி தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணி வகுப்பில், என்சிசி மாணவர்கள் மற்றும் மாணவிகள் அடங்கிய இரண்டு படைப்பிரிவுகள் பங்கேற்கும். தில்லியில் நடைபெறும் குடியரசு தின முகாமில் பங்கு பெறும் தேசிய மாணவர் படையிலிருந்து இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த முகாம் தில்லி கன்டோன்மென்ட் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில், கடந்த 4ம் தேதி தொடங்கியது.

28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களில் இருந்து 380 மாணவிகள் உட்பட  1000 என்சிசி மாணவர்கள் இந்த ஒரு மாத முகாமில் பங்கேற்றுள்ளனர்.  இந்த முகாமின் நோக்கம், இதில் பங்கு பெறும் மாணவர்களுக்கு நமது நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த முகாமில் நடைபெறும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தெரிவிப்பதாகும். இந்த முகாமில் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் பிரதமரின் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் கலந்து கொள்கிறார்.

**********************



(Release ID: 1687201) Visitor Counter : 95