நிதி அமைச்சகம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீர்திருத்தங்களை நிறைவு செய்த தெலங்கானா : ரூ.2,508 கோடி கூடுதல் கடனுக்கு அனுமதி

Posted On: 07 JAN 2021 3:18PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீர்திருத்தங்களை நிறைவு செய்த நாட்டின் மூன்றாவது மாநிலமாக தெலங்கானா ஆனது. இதன் மூலம், திறந்தவெளி சந்தைகளின் மூலம் ரூ.2,508 கோடி கூடுதல் நிதியைத் திரட்டுவதற்கான தகுதியை அம்மாநிலம் பெற்றுள்ளது.

இதற்கான அனுமதியை இன்று செலவினங்கள் துறை வழங்கியது. இந்தச் சீர்திருத்தங்களை ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் ஏற்கனவே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, ரூ.7,406 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கான அனுமதி இந்த மூன்று மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அமைப்பை வலுப்படுத்துவதையும், சிறப்பான பொது சுகாதாரம், தூய்மை சேவைகளை வழங்குவதற்கு அவற்றைத் தயார்படுத்துவதையும் இந்த சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. பொருளாதார ரீதியாக புத்தாக்கம் பெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளால் சிறந்த உள்ளூர் உள்கட்டமைப்பை உருவாக்க முடியும்.

இதுவரை, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 10 மாநிலங்களும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை ஏழு மாநிலங்களும், உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தங்களை மூன்று மாநிலங்களும் செயல்படுத்தி உள்ளன. சீர்திருத்தங்களை செய்துள்ள மாநிலங்களுக்கு ரூ.54,190 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686771

*****

(Release ID: 1686771)



(Release ID: 1686801) Visitor Counter : 220