புவி அறிவியல் அமைச்சகம்

அதி தீவிர புயலாக மாறுகிறது ‘‘நிவர்’’, தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை


காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவம்பர் 25 இரவு முதல் நவம்பர் 26 காலைக்குள் கரையை கடக்க வாய்ப்பு

மணிக்கு 120 முதல் 145 கி.மீ வரை பலத்த காற்று வீசும்

Posted On: 25 NOV 2020 12:06PM by PIB Chennai

 ‘நிவர்அதி தீவிர புயலாக மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவம்பர் 25-ம்தேதி இரவு முதல் 26-ம் தேதி காலைக்குள் கரையை கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 120 கி.மீ முதல் 145கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் இந்திய வானிலை துறை கூறியுள்ளது.

 

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 240 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 250 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கு திசையில் 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நவம்பர் 25-ம் தேதி இரவு முதல் நவம்பர் 26-ம் தேதி காலைக்குள் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது மணிக்கு 120 முதல் 145 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

 

எச்சரிக்கை:

மழைப்பொழிவு

இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் கடலோர மற்றும் வடக்கு உள்பகுதிகளிலும், ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோர பகுதி மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளில் நவம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் பரவலாக மழையும்/ இடியுடன் கூடிய மழையும் பெய்யும். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும், ராயலசீமா மற்றும் தென்கிழக்கு தெலங்கானாவில் ஒரு சில இடங்களில் நவம்பர் 26-ம் தேதியும் தீவிர கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

காற்று எச்ரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தமிழகம், புதுச்சேரியின் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் நாளை காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ முதல் 145 கி.மீ வரை அதிகரிக்கும்.

 

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடலோர மாவட்டங்களில் ராட்சத அலை 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் உயரம் வரை எழும்.

தமிழகத்தின் நாகப்பட்டி்னம், மயிலாடுதுறை, கடலூர், விழும்புரம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் காரைக்கால, புதுச்சேரியில் எதிர்பார்க்கப்படும் பாதிப்புகள்: 

* குடிசை வீடுகள் பலத்த சேதமடையும், உலோக தகடுகள் பறக்கலாம். 

* மின் மற்றும் தொலை தொடர்பு, ரயில்வே மின் கம்பிகள் பாதிப்படையலாம்.

* பாதுகாப்பற்ற வீடுகள் சேதமடையும். சாலைகள் சேதமடையும். சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.

* மரங்கள் முறியலாம், வேரோடு சாயலாம். வாழை, பப்பாளி, தோட்டக்கலை பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும்.

* படகுகள் இழுச்துச் செல்லப்படலாம்.

* கடலோர மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும்.

* நீர் தேக்கங்களின் கரைகள், உப்பளங்கள் சேதமடையும்.

 மீனவர்களுக்கான எச்சரிக்கை:

* மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

* கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

* பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.

* படகுகளில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675559

 

*******************



(Release ID: 1675583) Visitor Counter : 123