புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

விவசாயத் துறையில் அதிக சூரிய சக்தி உற்பத்திக்காக பிரதமரின்-குசும் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

Posted On: 13 NOV 2020 1:10PM by PIB Chennai

பிரதமரின் விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்தின் (Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyaan - PM-KUSUM) முதலாம் ஆண்டு செயல்பாட்டில் அறிந்து கொண்டவற்றின் அடிப்படையில், இத்திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் செய்துள்ளது.

 விவசாயத் துறையில் அதிக அளவில் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக பிரதமரின்-குசும் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதன் படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய சக்தி உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். சிறு விவசாயிகளும் இதில் பங்கு பெறும் விதமாக சூரிய சக்தி ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நீர் பயனர் சங்கங்கள், விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களால் நிறுவப்பட்டு, பயன்படுத்தப்படும் சூரிய சக்தி நீரேற்றிகளுக்கும், குழு சார்ந்த நீர்ப்பாசன அமைப்புக்கும் மத்திய நிதியுதவி அனுமதிக்கப்படுகிறது.

பொதுவான சூரிய சக்தி நீரேற்றி கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சூரிய சக்தி நீரேற்றிகளுக்காக தனித்தனியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றுக்கு மானியமும் வழங்கப்படும்.

பிரதமரின் விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2019 பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது ஒப்புதல் அளித்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672580

**********************



(Release ID: 1672681) Visitor Counter : 351