ஆயுஷ்

மன நலனைக் காப்பதில் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை என்ற சர்வதேச இணையக் கருத்தரங்கு வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது

Posted On: 03 NOV 2020 3:20PM by PIB Chennai

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்துடன் இணைந்து வரும் 5-ஆம் தேதி மன நலனைக் காப்பதில் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை என்ற கருப்பொருளில் ஓர் இணையக் கருத்தரங்கை நடத்துகிறது. ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் மூலம் மன நலனைக் காப்பது குறித்து இந்த இணையக் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தலைசிறந்த யோகா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

துவக்க விழாவில் மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஆஸ்திரேலிய அமைச்சர் டாக்டர் ஜெஃப் லீ, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய. ராஜேஷ் கொட்டேச்சா, வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பார்னே க்ளோவர் ஆகியோரும் இதில் கலந்து கொள்வார்கள்.

2020 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் தயாரித்துள்ள கட்டுரைகள் அடங்கிய 'உடல்-மன நலத்திற்கு யோகா' என்ற மின்னூலும் சர்வதேசக் கருத்தரங்கின் துவக்க விழாவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669760

******

(Release ID: 1669760)



(Release ID: 1669796) Visitor Counter : 174