நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

அக்டோபர் 30 வரை நெல் கொள்முதல் விவரம்: கடந்த ஆண்டை விட 23% அதிக கொள்முதல்

Posted On: 31 OCT 2020 4:50PM by PIB Chennai

காரீப் சந்தைக் காலத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடந்த ஆண்டை விடவும் 23 சதவீதம் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத் மற்றும் கேரளாவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு கடந்த 30-ஆம் தேதி வரை 197.19 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 159.76 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

இது கடந்தாண்டு இதே ஆண்டு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விடவும் 23.43 சதவீதம் அதிகமாகும். இந்தாண்டில் இது வரையிலான 197.19 லட்சம் மெட்ரிக் டன் மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 136.47 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த கொள்முதலில் 69.21 சதவீதம் ஆகும்.

 

நடப்பு காரீப் சந்தை காலத்தில் 16.62 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 37230.35 கோடி பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலைகுறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.

கடந்த 30-ஆம் தேதி வரையில் முன்னணி முகமைகளின் வாயிலாக அரசு சார்பில் ரூ.45.51 கோடி மதிப்பில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மாநிலங்களில் சோயா பீன்ஸ், பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை ஆகியவை 4811 விவசாயிகளிடம் இருந்து 7966 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 3961 விவசாயிகளிடம் இருந்து ரூ.52.40 கோடி ரூபாய் என குறைந்த பட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது. 30.10.2020 வரை, 114376 விவசாயிகளிடமிருந்து, 603711 பருத்தி பேல்கள், ரூ. 176068 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669119

-----



(Release ID: 1669143) Visitor Counter : 142