புவி அறிவியல் அமைச்சகம்

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மீது குறைந்த காற்றழுத்த பகுதி, தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted On: 09 OCT 2020 2:45PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் புயல் எச்சரிக்கை பிரிவு கீழ்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளது:

இன்று (2020 அக்டோபர் 9) அதிகாலை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவானது.

இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மீது அது மையம் கொண்டிருந்தது.

மத்திய வங்காள விரிகுடா மீது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது நாளை (2020 அக்டோபர் 10) வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தினங்களில் குறைவானது முதல் மிதமான மழையும், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகாவின் உட்புற பகுதிகள் மற்றும் மராத்வாடா ஆகிய இடங்களில் ஆங்காங்கே 2020 அக்டோபர் 10 அன்று மிக அதிக அளவில் மழையும் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடலோர ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகாவின் உட்புற பகுதிகள், மராத்வாடா மற்றும் விதர்பா ஆகிய இடங்களில் ஆங்காங்கே 2020 அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் மிக அதிக அளவில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 11 அதிகாலை முதல் அக்டோபர் 12 மதியம் வரை ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், அக்டோபர் 9 முதலே வானிலை மோசமாக இருக்கக்கூடும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663067

                                                                   ---- 



(Release ID: 1663192) Visitor Counter : 190