உள்துறை அமைச்சகம்
வேளாண் சீர்திருத்தங்களுக்கான இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சியை காணப்போகும் காலத்தின் தொடக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா புகழாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 SEP 2020 8:23PM by PIB Chennai
விவசாயத்துறையின் சீர்திருத்தங்களுக்கான இரண்டு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வரவேற்றுள்ளார்.
இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சியை காணப்போகும் காலத்தின் தொடக்கம் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
நமது விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வேளாண் துறையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அசைக்கமுடியாத உறுதியை நாடாளுமன்றத்தில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது பிரதிபலிக்கிறது என்று திரு அமித்ஷா கூறினார்.
"ஓட்டுவங்கி அரசியலுக்காக தசாப்தங்களாக விவசாயிகளை இருட்டிலும், ஏழ்மையிலும் வைத்திருந்தவர்கள் விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசால் எடுக்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை தற்போது எதிர்ப்பதன் மூலம் அவர்களை தூண்டி விடவும் தவறாக வழி நடத்தவும் முயற்சிக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
"என்னுடைய விவசாய சகோதரர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்களின் நலனுக்காக ஒருவர் சிந்திப்பார் என்றால் அது பிரதமர் மோடி அவர்கள் மட்டும்தான்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.
"விவசாயிகளை சென்றடைய வேண்டிய தொகைகளை அவர்களுக்கு தராமல் இருந்த இடைத்தரகர்களின் பிடியிலிருந்து நமது விவசாய சகோதரர்களுக்கு மோடி அரசின் அந்த விவசாய சீர்திருத்தங்கள் விடுதலை அளிக்கும்," என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வேளாண் சீர்திருத்தங்களின் மூலம் தங்களுடைய வேளாண் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்று சரியான விலையை விவசாயிகள் பெறலாம். இதன் மூலம் அவர்களது வருமானம் பெருகும் என்று திரு அமித்ஷா தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்றும், வேளாண் விளைபொருட்களின் அரசு கொள்முதலும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1657056
(வெளியீட்டு அடையாள எண்: 1657095)
வருகையாளர் எண்ணிக்கை : 207