சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19-ஐ எதிர்த்து போரிடும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

Posted On: 15 SEP 2020 6:33PM by PIB Chennai

கொவிட்-19-ஐ எதிர்த்து போரிடும் சுகாதார பணியாளர்களுக்காக 2020 மார்ச் 30 அன்று 90 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பு காப்பீட்டுத் திட்டம் 90 நாட்களுக்கு, அதாவது, 2020 செப்டம்பர் 25 வரை, நீட்டிக்கப்பட்டது.

 

தற்போது இத்திட்டம் இன்னும் 180 நாட்களுக்கு, அதாவது ஆறு மாதங்களுக்கு, நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

சுகாதார சேவையாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு இந்த மத்திய திட்டம் காப்பீடு அளிக்கும். இதில் சமுதாய சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள். கொவிட்-19 பாதித்த நோயாளிளுடன் நேரடியான தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவும் ஆபத்து வாய்ப்பில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. கொவிட்-19 தாக்கி எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்தக் காப்பீடு கிடைக்கும்.

 

கொவிட் - 19 தொடர்பான பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை அலுவலர்கள்/ ஓய்வுபெற்ற / தன்னார்வலர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / ஒப்பந்த / தினசரி கூலி அடிப்படையிலான / தற்காலிக / அயல்பணி அடிப்படையில் மாநில / மத்திய அரசு மருத்துவமனைகள் / மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள், எய்ம்ஸ் மற்றும் ஐ என் ஐ தன்னாட்சி மருத்துவமனைகள் / மத்திய அமைச்சகங்களின் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவரும் இதன் கீழ் வருவார்கள்.

 

பயனாளி வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும்.

 

இந்தத் திட்டத்தின் பயனைப் பெற வயது வரம்பு ஏதும் இல்லை மற்றும் தனிப்பட்ட முறையில் இணைதல் தேவையில்லை. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இத்திட்டத்துக்கான கட்டணங்களை முழுவதுமாக ஏற்கிறது. பயனாளி இதர காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக நியூ இந்தியா அஷ்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கைகோர்த்துள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் இது வரை மொத்தம் 61 கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. 156 கோரிக்கைகள் நியூ இந்தியா அஷ்ஷூரன்ஸ் நிறுவனத்தால் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், 67 வழக்குகளில் மாநிலங்களால் இன்னும் கோரிக்கை படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

 

தமிழ்நாட்டை பொருத்தவரை மொத்தம் 20 கோரிக்கைகள் நியூ இந்தியா அஷ்ஷூரன்ஸ் நிறுவனத்தால் பெறப்பட்டு, 4 + 1 கோரிக்கைகள் மீது பணிகள் முடிந்துள்ளன. எட்டு விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன, 7 தகுதியுடயவை அல்ல என கண்டறியப்பட்டுள்ளன மற்றும் 2 வழக்குகளில் மாநிலத்தால் இன்னும் கோரிக்கை படிவங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

 

இதர மாநிலங்களைப் பற்றிய தகவல்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1654635

 

*******



(Release ID: 1654866) Visitor Counter : 207