வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களை பிரதமரின் சுவநிதியில் இணைக்க பரிந்துரைக் கடித முறை அறிமுகம்

Posted On: 07 AUG 2020 2:11PM by PIB Chennai

பிரதமரின் சுவநிதித் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர் திரு. துர்கா ஷங்கர் மிஸ்ரா இன்று துவக்கி வைத்தார். அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க டிஜிட்டல் மயமான இந்த செயல்முறையின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்தை தகுதியுள்ள வணிகர் கோரலாம். அது கிடைத்தவுடன், பிரதமரின் சுவநிதியின் கீழ் கடனுக்காக அவர் விண்ணப்பிக்கலாம்.

பிரதமரின் சுவநிதி இணையதளத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்துக்காக விண்ணப்பிக்கும் போது, பின்வருவனவற்றில் ஏதாவது ஒரு ஆவணம் வணிகரிடம் இருக்க வேண்டும்: (i) பொதுமுடக்கத்தின் போது ஒரு முறை பெறும் உதவிக்காக சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் வழங்கப்பட்ட சான்று; (ii) வணிகர் சங்கங்களில் உறுப்பினராக உள்ள தகவல்கள்; அல்லது (iii) வணிகர் என்று நிரூபிப்பதற்கு ஏதேனும் இதர ஆவணங்கள். மேலும், வணிகர் என்று உறுதிப்படுத்துவதற்காக ஊள்ளூரில் விசாரணை நடத்துவதற்கு வேண்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் ஒரு சாதாரண வெள்ளை தாளில் எழுதியும் விண்ணப்பிக்கலாம். பரிந்துரைக் கடிதம் தொடர்பான கோரிக்கைகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்15 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்.

பரிந்துரைக் கடிதம் பெற்ற வியாபாரிகளுக்கு 30 நாட்களுக்குள் வணிக/அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அதிக அளவிலான பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையும்.

பிரதமரின் சுவநிதி இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை தொடங்கிய 2 ஜூலை, 2020 அன்று முதல், 4.5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்று, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்த வந்த 82,000-க்கும் அதிகமானவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன

******



(Release ID: 1644096) Visitor Counter : 190