ஜல்சக்தி அமைச்சகம்

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கேரளா முதலமைச்சருடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்

Posted On: 30 JUL 2020 7:10PM by PIB Chennai

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கேரளா முதலமைச்சர் திரு பினராயி விஜயனுடன், கேரளாவில் ஜல் ஜீவன் இயக்கத் திட்ட அமலாக்கம் குறித்து காணொலி மூலம் இன்று கலந்துரையாடினார். 2023க்குள் அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கேரளா திட்டமிட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 67.15 லட்சம் ஊரக வீடுகளில் 21.42 லட்சம் குடிநீர் குழாய் இணைப்பு தர வேண்டும் என்ற இலக்கை அடைய அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. 2019-20ம் ஆண்டில் 10.10 லட்சம் ஊரக வீடுகள் என்ற இலக்கில் அம்மாநிலம் 85,476 வீடுகளுக்கே இணைப்பு கொடுக்க முடிந்தது.

இந்த காணொலிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு ஷெகாவத், செயல்திறன் மற்றும் நிதிப் பயன்பாடு நிலவரம் குறித்து விவாதித்தார். சென்ற ஆண்டு கேரள மாநிலத்துக்கு மானிய உதவியாக ரூ.101.29 கோடி வழங்கப் பட்டது. எனினும் அம்மாநிலம் இதில் ரூ. 62.69 கோடியை மட்டுமே செலவிட முடிந்தது. ஆண்டு முடிவில் சுமார் ரூ. 41 கோடி பயன்படுத்தப் படாமலேயே நின்றுவிட்டது

மேலும், திட்டம் சார்ந்த முதலீடுகளுக்காக 15 -வது நிதி குழுவினால்கேரளாவுக்கு ரூ. 1628 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 50 சதம் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்கானது. இந்த நிதியை ஊரக குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரித்தல் மற்றும் மறுபயன்பாடு, முக்கியமாக குடிநீர் திட்டம் சார்ந்த நீண்ட கால செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சர் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், இலக்குகளை 2023ம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் காலக்கெடுவுடன் இயக்கத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

******



(Release ID: 1642540) Visitor Counter : 159