வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து நம்பிக்கையைக் கட்டமைக்குமாறு திரு.பியூஷ் கோயல் அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை

Posted On: 23 JUL 2020 8:19PM by PIB Chennai

முதன்மையான வர்த்தக கூட்டாளி என்ற தமது பங்கை இழந்து விடாமல் இருக்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, நம்பிக்கையைக் கட்டமைக்குமாறு, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று நடைபெற்ற பத்தாவது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்களின் மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றிய அவர், கொவிட்-19-க்கு பிறகான சீரமைப்புக் காலத்தில் வர்த்தகம் தனது பங்கினை ஆற்ற, அனைத்துக் கூட்டாளிகளும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 “நம்பிக்கையும், வெளிப்படைத்தன்மையும்தான் உலகளாவிய விநியோகச் சங்கிலியை நிலைத்திருக்க செய்கின்றன. உலகளாவிய வர்த்தகப் போக்கினில் தமது பங்கை நிலை நிறுத்த, உலக வர்த்தக விதிமுறைகளை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை கொண்டிருக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து, விநியோகச் சங்கிலியைக் கட்டமைப்பதற்காக உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகின்றது” என்று அவர் கூறினார்.

அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக, ஒரு சார்பாக வகுக்கப்பட்டுள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளால் மலிவான விலையில் மருந்துகளை பெறுவதில் உள்ள பன்முகத் தடைகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.



(Release ID: 1640869) Visitor Counter : 206