நிதி ஆணையம்

15வது நிதிக் குழு உலக வங்கி மற்றும் அதன் எச்.எல்.ஜி. உடன் சுகாதாரத் துறை குறித்த விஷயங்களுக்காக ஆலோசனை முதன்முறையாக நிதிக்குழு தனது பணிகளை சுகாதாரத் துறைக்கான நிதியளிப்பிற்கு அர்ப்பணிக்கிறது

Posted On: 07 JUL 2020 5:37PM by PIB Chennai

இந்தியாவின் சுகாதாரத் துறை குறித்த ஒரு புரிதல் ஏற்படுவதற்காகவும், சுகாதாரத் துறைக்கான செலவிடுதலுக்கு மறுமுன்னுரிமை ஏற்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தேவை மற்றும் எண்ணத்தைக் கருத்தில் கொண்டும், உலக வங்கி, நிதி ஆயோக் பிரதிநிதிகள் மற்றும் நிதிக் குழுவின் சுகாதாரத் துறைக்கான உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆகியோருடன் 15வது நிதிக் குழு விரிவான ஆலோசனை நடத்தியது.

15வது நிதிக் குழுவின் தலைவர் திரு. என்.கே. சிங் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிதிக் குழுவின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலக வங்கி சார்பில் அதன் இந்தியப் பிரிவுக்கான இயக்குநர் டாக்டர் .ஜுனைத் அஹமத், உலக அளவிலான இயக்குநர் திரு. முகமது அலி பாட்டே மற்றும் இதர மூத்த அதிகாரிகள்  கலந்து கொண்டனர். இது தவிர எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர். ரண்தீப் குலேரியா, நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பவுல், ஆயுஷ்மான் பாரத் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி டாக்டர். இந்து பூஷண் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்திய சுகாதாரத் துறையில் நீண்ட காலமாகவே உலக வங்கி ஈடுபாடு கொண்டுள்ளது என்று தொடக்கத்தில் டாக்டர் ஜுனைத் அஹமது தெரிவித்தார். அண்மையில், நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையில், இந்திய அரசுக்கு உலக வங்கி ஒரு பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனைகள் மூலமாக சேவைகள் அளிப்பதை பலப்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு உலக வங்கி ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எச்.ஐ.வி. துறையில் இந்திய அரசுடன் 20 ஆண்டு கால நீண்ட பங்களிப்பை அண்மையில் உலக வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்தது. சுகாதாரத் திட்டங்களை அமல் செய்வதில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் முக்கியமான பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். மாநிலங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட அம்சங்கள் கொண்டவையாக இருப்பதால், சுகாதாரத் தேவைகளுக்கான தீர்வுகள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். சுகாதார வசதி என்பது வெறும் சமூகச் செலவினமாக மட்டும் அல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமான அம்சமாக உள்ளது என்று ஜுனைத் அஹமது கூறினார். இந்த விஷயத்தில் மூன்று வெவ்வேறு வழிகளில் சுகாதாரத் துறையை நிதிக்குழு ஆய்வு செய்யலாம் என்றார் அவர். ஒரு நபருக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற அளவை அதிகரிக்க மானியங்கள் அளித்தல், திறன் வளர்ப்புக்கு மானியம், சில சுகாதாரப் பலன்களுக்கு செயல்திறனுடன் கூடிய ஊக்கம் அளித்தல் என அணுகலாம் என்றார் அவர். அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார். இந்தியாவில் சுகாதாரத் தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு தனியார் துறை மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தனியார் துறையுடன் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக, பயனாளிகளுக்கு நேரடியாக உதவிகளை அளிக்கும் திட்டத்தின் (டி.பி.டி.) மூலம் தனியார் கிளினிக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொற்றும் தன்மை அல்லாத நோய்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. காசநோய் போன்ற தொற்றும் தன்மை உள்ள மற்ற நோய்கள் பற்றியும் கவனம் செலுத்தியாக வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தச் செயல்திட்டங்களை அமல் செய்வதில் மத்திய அரசின் மூலமான திட்டங்களுடன் மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை ஜுனைத் வலியுறுத்தினார். இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சம்கிர ஷிக்சா அபியான் திட்டத்தை உலக வங்கி எப்படி அமல்படுத்தியது என்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். அதே போல, சுகாதாரத் துறையில், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவச் சேவை வழங்குநர்கள், முனிசிபல் அமைப்புகள், சமூக சேவைத் துறை ஆகியவற்றின் சேவைகளை கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதுபோன்ற அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் போது, அதற்கான வடிவமைப்பு உருவாக்குதல் மற்றும் அமலாக்கத்தில் உலக வங்கி முக்கிய பங்கு வகிக்கலாம் என்றார் அவர். பொதுவான இலக்கை எட்டுவதற்கான உலக வங்கியின் முயற்சிகளுடன் நிதிக்குழுப் பரிந்துரைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதாக அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.

உலக வங்கி சார்பில் அளிக்கப்பட்ட தகவல்களில் முக்கியமானவை:

  • புதுமைச் சிந்தனைகளைப் பயன்படுத்துதல், தொழில்நுட்பத்தை சாதகமாக்கிக் கொள்வது, நிறுவன அமைப்புகளைப் பலப்படுத்துதல், ஒருங்கிணைப்பு மற்றும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தலில் சேவை அளிப்பில் சீர்திருத்தங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
  • கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, இதர நோய்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணங்கள் என்ற நேரடி தாக்கத்தை விட, பொருளாதாரத் தாக்கம் இன்னும் பெரிய அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, பன்னாட்டு நிதியத்தின் கணிப்பின்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதம் அளவுக்குக் குறையும், அது இதுவரை நாட்டில் நிகழ்ந்திராத சரிவாக இருக்கும்.
  • இந்திய சுகாதாரச் சேவையில், கவனிப்பின் தரம் முக்கியமான அம்சமாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலும், சேவை அளிப்பவர்களுக்கு இடையிலும் இதில் பெரிய அளவு வித்தியாசங்கள் உள்ளன.
  • செலவு செய்வதில் நல்ல தரத்தை உறுதி செய்வதற்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதை மேம்படுத்த பி.எப்.எம். (PFM) சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலங்கள் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கணக்கீடுகள் மக்கள் தொகையின் அடிப்படையிலான தேவையை (மரண விகிதம்/வேறு நோய்கள் பாதிப்பு/சமன் நிலை) கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் வகையில் இருக்கக் கூடாது. சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களை சிறு, சிறு அளவில் குறைத்துவிடக் கூடாது. தேவைக்கு ஏற்ப நிதி அளிக்கும் நடைமுறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் உள்ளது.
  • சமன்நிலை மற்றும் தேவை குறித்து புதிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக தேசிய சுகாதாரத் திட்டத்தின் அளவு சுகாதாரத்துக்கு தனிநபருக்கான செலவிடுதலுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதேபோல, ஏழை மாநிலங்களில், ஒரு பயனாளிக்கு எவ்வளவு செலவு என்ற அளவு அதிகரிக்க வேண்டும். சுகாதாரத்துக்காக தேவையின் அடிப்படையிலான பரிமாற்ற கணக்கீடுகள் கவனமாக உருவாக்கப்பட வேண்டும். மேலும், தனியாக ஒரு சுகாதார சமன்நிலை தொகுப்பு தேவைப்படுகிறது. இலக்குகளை அடைதல் உள்பட, வெளிப்படையான பொறுப்பேற்புக் கட்டமைப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
  • மாநிலங்களுக்குள் ஆதாரவளம் ஒதுக்கீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
  • அரசு / தனியார் கலவையில் அவ்வப்போது எழும் தேவைகளின் அடிப்படையில் சேவைகள் அளித்தல் இருக்க வேண்டும்.
  • சேவை அளித்தல் சீர்திருத்தங்களை ஊக்குவிக்க `திறந்தநிலை ஆதாரவளம்' என்ற அணுகுமுறையை அளிப்பதாக இந்திய அரசு இருக்க வேண்டும். உதாரணமாக, அமலாக்கம் மற்றும் செயல்பாட்டைத் திருத்திக் கொள்ளும் வசதியுடன் கூடிய, மத்திய அரசின் மூலமாக அமல் செய்யப்படும் திட்டங்களுக்கு நிதி அளிப்பதில், பொறுப்பேற்பு நடைமுறைகளை மத்திய திட்டங்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும் வகையில்  நிர்ணயித்தல், அறிவார்ந்த விஷயங்களைப் பரிமாற்றம் செய்தலை ஊக்குவித்தல் முறையைப் பயன்படுத்தலாம்.
  • சேவை அளிப்பதில் புதுமைச் சிந்தனைகளை ஊக்குவிக்கலாம். தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளை அறிமுகம் செய்தல், நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களை ஒப்பந்த அடிப்படையிலான தனியார் சேவையாளர்கள் மூலமாக நடத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், தகவல் தொகுப்பு அறிவியல், பிரமிட் மாடல்களின் அடித்தளம் ஆகியவற்றில்  அரசு - தனியார் பங்களிப்புகளை ஊக்குவித்தல்; பலதுறை செயல்பாடுகள் மற்றும் சமுதாய ஒத்துழைப்பைப் பெறுதல் போன்றவற்றை ஊக்குவிக்கலாம்.
  • முக்கியமான பொது சுகாதார செயல்பாடுகளை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதிய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் நோய்க்குறி கண்டறிதல் போன்ற உலக அளவிலான மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும். காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தனியார் துறையினர் ஈடுபாட்டை பயன்படுத்திக் கொள்ளுதல், காசநோய் செயல்பாட்டுக் குறியீடு மூலம் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செயல்பாட்டின் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறையைப் பின்பற்றலாம்.
  • எதிர்காலத்தில் தீவிர நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு செயல்படுவதற்காக கண்காணிப்பு மற்றும் மாவட்ட அளவிலான திறன்களைப் பலப்படுத்த வேண்டும். அதற்கென பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:
  • வசதிகள் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகக் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த குறிப்பிட்ட கவனத்துடன் கூடிய முதலீடுகளை அளித்தல்.
  • ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிந்து, உரிய முறையில் எதிர்கொள்வதற்கான பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்திக் கொள்ள மத்திய அளவிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு விஷயத்தில், மையமான திறன்களைக் கொண்ட மாவட்ட கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துதல்.
  • எதிர்கால நோய்த் தாக்குதல்கள் விலங்குகளிடம் இருந்து பரவக் கூடியதாக இருக்கலாம் என்பதால் மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆரோக்கியம் குறித்த கண்காணிப்புக்கு, தொடர் கண்காணிப்பு மற்றும் அறிக்கை அளிப்பு நடைமுறைகளை உருவாக்கி அமல்படுத்த வேண்டும்.
  • நோய்த் தொற்றுகளுக்கு (என்.சி.டி.சி.) சிறப்பாக ஆயத்தமாவதற்கு தேசிய மற்றும் மாநில நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐ.சி.எம்.ஆர்.) செம்மையான மையமாக உருவாக்கிட வேண்டும்.
  • நோய்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஏஜென்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்த வேண்டும்.
  • நோய்களை எதிர்கொள்ளுதல், நோயறிதல், மருத்துவப் பரிசோதனைகள் செய்தல், அறிகுறிகளுக்கு உடனே செயலாற்றுதல் மற்றும் பொது சுகாதாரங்கள் விஷயத்தில் ஐ.சி.எம்.ஆர்., என்.சி.டி.சி. மற்றும் என்.டி.எம்.ஏ. போன்ற நிறுவனங்களை பலப்படுத்த வேண்டும்.

 

சுகாதார சேவைகள் அளிப்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். பவுல் வலியுறுத்தினார். சுகாதாரத்துக்கான செலவில் 65 சதவீதம் மாநில அரசுகள் மூலம் செய்யப்படுவதாகவும், 35 சதவீதம் மத்திய அரசால் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரத் துறையிக்கான ஒட்டுமொத்த செலவினத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

சுகாதாரத் துறையில் அரசு - தனியார் பங்களிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர். குலேரியா கூறினார். சுகாதாரத் துறையில் நோய் பகுப்பறிதல் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் ஜன ஆரோக்கியா திட்டத்தில் `விடுபட்ட இடைநிலை' மக்களைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ,இந்து பூஷண் வலியுறுத்தினார். வருவாய்ச் சரிவு மற்றும் செலவுகள் அதிகரிப்பால்  தனியார் மருத்துவமனைகள் சிரமத்தில் இருப்பதால் அவற்றுக்கு உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். சுகாதாரச் சேவையானது மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிதி  அமைச்சர் வெளியிட்ட பொருளாதாரத்துக்கான சிறப்பு தொகுப்புத் திட்ட அறிவிப்பில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் எண்ணம் இருப்பதாகக் கூறியதை நிதிக் குழு தலைவர் திரு. என்.கே. சிங் நினைவுகூர்ந்தார்.

இந்தியா கோவிட்-19 அவசரகாலச் செயல்பாடு மற்றும் சுகாதார நடைமுறைகள் ஆயத்தநிலைத் தொகுப்புத் திட்டத்திற்கு (ER&HSP)  ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை 2020 ஏப்ரல் 22 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது நினைவுகூரத்தக்கது. தனிமைப்படுத்தல் வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கோவிட் வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், சுகாதார அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல், பரிசோதனைத் திறன்களை அதிகரித்தல், பி.பி.இ. முழு உடல் கவஉடைகள், என்-95 முகக்கவச உறைகள், வென்டிலேட்டர்கள், பரிசோதனை உபகரணத் தொகுப்புகள், மருந்துகள் வாங்குதல், ரயில் பெட்டிகளை கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றுதல், கண்காணிப்புப் பிரிவுகளை பலப்படுத்துதல், அவசர காலச் செயல்பாட்டுக்கு மாவட்டங்களுக்கான கட்டுப்பாடில்லாத நிதி ஏற்பாடு செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

வரிசை எண்

இனம்

தொகை

(ரூ. கோடியில்)

1

அவசர கால கோவிட்-19 செயல்பாடு

7500

2

நோய்த் தடுப்பு மற்றும் ஆயத்தநிலைக்காக தேசிய மற்றும் மாநில சுகாதார அமைப்புகளை பலப்படுத்துதல்

4150

3.

தீவிர நோய்த் தாக்குதல் ஆராய்ச்சி மற்றும் ஒரே மாதிரி ஆரோக்கியத்துக்காக பல துறை, தேசிய அமைப்புகள் மற்றும் களங்களைப் பலப்படுத்துதல்

1400

4.

சமுதாய அளவிலான ஈடுபாடு மற்றும் ஆபத்து வாய்ப்புத் தகவல் தொடர்பு

1050

5.

அமலாக்கம், மேலாண்மை, திறன் உருவாக்கல், மேற்பார்வை மற்றும் மதிப்பீடு செய்தல்

900

 

மொத்தம்

15000

 

 

 

முதன்முறையாக 15வது நிதிக்குழுவின் சந்திப்பு முழுக்க சுகாதார நிதியளிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று அதன் தலைவர் தெரிவித்தார். 15வது நிதிக்குழு மற்றும் உலக வங்கி சார்பில் அமைக்கப்பட்ட சுகாதாரத் துறைக்கான உயர்நிலைக் குழு, சுகாதாரத் துறைக்குப் பொருத்தமான பரிந்துரைகளை உருவாக்குவதற்கு தனது ஆய்வை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார். அந்தக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை அளிப்பதற்கு முன்பு, மத்திய அரசால் நிதியளிக்கும் திட்டங்களின் மூலம் சுகாதாரத் துறைக்கான இந்திய அரசின் செலவினம் குறித்து, நிதிக்குழுவால் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

*****



(Release ID: 1637067) Visitor Counter : 3619